மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தால் அபாயம்: கருணாநிதி கருத்து
சென்னை: மத்தியில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தால் பெரிய அபாயம் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
சென்னையில் நேற்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு கருணாநிதி அளித்த பதில்கள்:
கேள்வி: தேர்தல் ஆணையம் எந்த தேர்தலிலும் இல்லாத வகையில் மக்களைப் பயமுறுத்துவதை போல 144 தடை விதித்திருக்கிறார்கள். மார்க்சிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் அதனை எதிர்த்து இருக்கின்றன. அது சம்பந்தமான உங்கள் கருத்து என்ன?.
பதில்: பயமுறுத்துவதை போல தெரியவில்லை. எந்த எண்ணத்தோடு அதை பிறப்பித்திருக்கிறார்கள் என்று இப்போது கூற முடியாது.
கேள்வி: பா.ஜ.க. தலைவர்கள், பிரவீன் தொகாடியா போன்றவர்கள் சிறுபான்மை மக்களுக்கு எதிராக கருத்து வெளியிட்டிருக்கிறார்கள். அது அபாயகரமான விஷயமாக உள்ளது. நீங்கள் தமிழகத்தில் சிறுபான்மை மக்களின் ஆதரவோடு இந்த தேர்தலை சந்திக்கிறீர்கள். பா.ஜ.க.வினர் இவ்வாறு மோடி பிரதமரானால் இஸ்லாமியர்கள் பாகிஸ்தானுக்கு அனுப்பப்படுவார்கள் என்றெல்லாம் சொல்கிறார்களே?.
பதில்:- அவ்வாறு ஒருசிலர் பேசுகின்ற கருத்துகளால் சிறுபான்மையினரை பயமுறுத்தும் சூழல் ஏற்பட்டிருக்கிறது. மத சண்டைக்கு என்னென்ன வேண்டுமோ அதையெல்லாம் செய்கிறார்கள். இந்த சூழலில் மதசார்பற்ற அரசு அமைய வேண்டும் என்பது தான் என்னுடைய கருத்து.
பாஜக ஆட்சிக்கு வந்தால் அபாயம்
கேள்வி: பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் பெரிய அபாயம் என்று நினைக்கிறீர்களா?.
பதில்: அப்படி கருதாமல் இருக்க முடியாது.
கேள்வி: தமிழகத்தில் மோடி அலை இருப்பதாக பா.ஜ.க.வினர் சொல்கிறார்கள். அப்படி மோடி அலை இருக்கிறதா?.
பதில்: தமிழகத்தில் அப்படி இருப்பதாக எனக்கு தெரியவில்லை..
இவ்வாறு கருணாநிதி கூறினார்.
தேர்தல் ஆணையத்துக்கு கண்டனம்
இதனிடையே தேர்தல் ஆணையத்துக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், "பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகளுக்கு பூச்சாண்டி காட்டுவதாக தேர்தல் ஆணையத்தின் செயல் உள்ளது. ஆளும் கட்சி நடத்தும் அவலங்களை தடுப்பது தேர்தல் ஆணையத்தின் கடமை. ஆனால் தேர்தல் ஆணையம் அதிகாரவர்க்கத்திற்கு ஆலவட்டம் சுற்றுகிறது. தேர்தல் ஆணையம் ஆளும் கட்சிக்கு சாதகமாகவும் அடிமையாக இருக்கிறது. ஜனநாயகம் போய் சர்வாதிகாரம் வந்துவிடுமோ என்று மக்கள் அச்சத்தில் உள்ளனர்" என்றார்.