ஜெ. விடுதலையை எதிர்த்த கர்நாடக அரசு ‘அப்பீல்’ செய்வது மகிழத்தக்க செய்தி: கருணாநிதி
சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து முதல்வர் ஜெயலலிதாவை விடுவித்து கர்நாடக உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய கர்நாடக அரசு முடிவு செய்துள்ளதை திமுக தலைவர் கருணாநிதி வரவேற்றுள்ளார்.
அவரது பேட்டி,
கேள்வி: ஜெயலலிதாவின் விடுதலையை எதிர்த்து கர்நாடக அரசு அப்பீல் செய்ய முடிவு செய்திருக்கிறதே. அதைப் பற்றி தங்கள் கருத்து என்ன?
கருணாநிதி: ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில், கர்நாடக அரசு அப்பீல் செய்யப் போவதாக; வந்துள்ள செய்தி மகிழத்தக்க செய்தியாகும். நீதியை நிலைநாட்ட யார் முன்வந்தாலும் அவர்களை வரவேற்கத்தயாராக இருப்பவன் நான் என்பதால், கர்நாடக அரசின் முடிவை வரவேற்கிறேன்.
கேள்வி: ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலை பெரும்பாலான எதிர்க்கட்சிகள், உங்களைப் போலவே புறக்கணித்திருக்கிறார்களே?
கருணாநிதி: தமிழ்நாட்டில் தற்போது தேர்தல்கள் எப்படி நடைபெறுகிறது என்பதை ஏற்கனவே நேரில் உணர்ந்த கட்சிகள், இனியும் தாங்கள் இந்த ஜனநாயக முரண்பாடுகளுக்குப் பலியாகத் தயாராக இல்லை என்பதால்தான், இந்த இடைத் தேர்தலை பெரும்பாலான எதிர்க்கட்சிகள் புறக்கணித்துள்ளன. இது வரவேற்கத்தக்க செய்தியாகும்.
கேள்வி: ஐ.ஐ.டி. மாணவர்கள் நடத்தும் போராட்டத்திற்கு அனைத்துக் கட்சி தலைவர்களும் ஆதரவு நல்கியபோதும், ஜெயலலிதா அரசுத் தரப்பில் இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. ஒரு அறிக்கைக்கூட வெளியிடவில்லையே?
கருணாநிதி: ஜெயலலிதா தலைமையிலான அரசு இது பற்றி வாய் திறந்தால்தான் ஆச்சரியம்!
கேள்வி: தாழ்த்தப்பட்ட மாணவ சமுதாயத்தின்மீது நடக்கிற தாக்குதல்கள் என்று இதனை எடுத்துக் கொள்ளலாமா?
கருணாநிதி: ஐ.ஐ.டி. மாணவப் பிரச்சினை குறித்து கழகத்தின் சார்பில் நானும், பொருளாளர் தம்பி ஸ்டாலினும் விளக்கமாக அறிக்கை வெளியிட்டுள்ளோம். அதில் எல்லா விவரங்களும் இடம் பெற்றுள்ளன. கழகத்தின் சார்பில் இதற்காக அங்கே ஆர்ப்பாட்டமும் நடைபெற்றுள்ளது.
கேள்வி: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட ‘டிராபிக்'ராமசாமி உங்களிடம் ஆதரவு கேட்டிருந்தாரே; உங்கள் நிலைப்பாடு என்ன?
கருணாநிதி: ‘டிராபிக்' ராமசாமி அவர்கள் பல கட்சிகளின் தலைவர்களைச் சந்தித்து ஆதரவு கேட்டிருக்கிறார். அதுபோலத்தான் எங்களையும் கேட்டிருக்கிறார். நாங்கள் அதைப் பரிசீலிப்பதாகச் சொல்லியிருக்கிறோம்.