சொந்தக் காசில் சூனியம்! நெல்லையில் திமுக மேயரை ரவுண்டு கட்டிய திமுக கவுன்சிலர்கள்! தலைமைக்கு தலைவலி!
நெல்லை: நெல்லை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் திமுக மேயர் சரவணனுக்கு எதிராக திமுக கவுன்சிலர்களே அமளியில் ஈடுபட்டது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மொத்தம் 55 வார்டுகள் உள்ள நெல்லை மாநகராட்சியில் 51 இடங்களில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சியை சேர்ந்தவர்கள் கவுன்சிலர்களாக உள்ளனர்.
இதனால் தனக்கு எந்த நெருக்கடியும் ஏற்படாது என நினைத்த மேயர் சரவணனுக்கு சொந்தக் கட்சியினரே கடும் நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.

நெல்லை மாநகராட்சி மேயர் சரவணனுக்கும் மாவட்டச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான அப்துல் வஹாப்புக்கும் இடையே பனிப்போர் நிலவி வருகிறது.
அப்துல் வஹாப்பின் ஆதரவாளராக அறியப்பட்ட மேயர் சரவணன் ஒரு கட்டத்தில் தனித்து செயல்படத் தொடங்கியதோடு சில முடிவுகளை தன்னிச்சையாகவும் எடுக்கத் தொடங்கினார்.
இதனால் மாவட்டச் செயலாளரின் ஆதரவு கவுன்சிலர்கள் மேயர் சரவணனுக்கு குடைச்சல் கொடுக்க ஆரம்பித்தனர். மேலும் எல்லாவற்றுக்கும் மேலாக மேயரை மாற்றக்கோரி கடந்த மாதம் அமைச்சர் கே.என்.நேருவை திருச்சியில் சந்தித்து முறையிட்டனர்.
அவர்களிடம் சமாதானம் பேசிய அமைச்சர் நேரு, பேசித் தீர்த்துக்கொள்வோம் என்றும் ஊருக்கு போகுமாறும் கூறி அனுப்பி வைத்தார். அதற்குள் அவர் திருச்சி சிவா வீடு தாக்கப்பட்ட சர்ச்சையில் சிக்கியதால் நெல்லை பிரச்சனையை கிடப்பில் போட்டார்.

இந்நிலையில் மாமன்ற கூட்டம் நடைபெறும் அரங்கத்திற்குள்ளேயே கைகலப்பு ஏற்படும் அளவுக்கு நிலைமை சென்றுவிட்டது. மாநகராட்சி ஆணையர் இரு தரப்பையும் சமாதானம் செய்து இருக்கையில் அமர வைக்கும் அளவுக்கு அங்கு நிலைமை மோசமாகிவிட்டது.
திமுக மேயரை திமுக கவுன்சிலர்களே எதிர்த்து அமளியில் ஈடுபடுவதை அதிமுக ரசிக்கிறது. நெல்லையை போலவே கடலூர், வேலூர், ஈரோடு, மதுரை, உள்ளிட்ட மாநகராட்சிகளிலும் திமுக மேயர்களுக்கு எதிராக திமுக கவுன்சிலர்கள் போர்க்குரல் உயர்த்தி வருகின்றனர்.
இதனிடையே இந்தப் பஞ்சாயத்தை தீர்த்து வைக்க அமைச்சர் நேருவை திமுக தலைமை நெல்லைக்கு அனுப்பி வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications