கரூர்: கருணாநிதி போட்டோவுடன் திரண்ட திமுக கவுன்சிலர்கள்.. செய்தியாளர்களுக்குத் தடை.. வெளிநடப்பு!!
கரூர்: கரூர் நகராட்சியில் இன்று நடந்த கூட்டத்தின்போது திமுக கவுன்சிலர்கள், கட்சித் தலைவர் கருணாநிதியின் புகைப்படத்துடன் வந்துள்ளனர். நகராட்சித் தலைவர் அலுவலகத்தில் கருணாநிதி படத்தை வைப்போம் என்று கூறி புகுந்தனர். இதையடுத்து செய்தியாளர்களுக்கு நகராட்சித் தலைவர் செல்வராஜ் தடை விதித்தார். இதைக் கண்டித்தும், போலீஸ் குவிப்பைக் கண்டித்தும் திமுக கவுன்சிலர்கள் வெளிநடப்புச் செய்தனர்.
கரூர் நகராட்சி மன்ற சாதாரணக் கூட்டம் இன்று கூட்டப்பட்டது. கூட்டத்திற்குத் தலைவர் தமிழ்நாடு செல்வராஜ் தலைமை தாங்கினார்.
77 தீர்மானங்கள் இன்று விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. கூட்டத்திற்கு வந்த திமுக கவுன்சிலர்கள் திமுக தலைவர் கருணாநிதியின் புகைப்படத்துடன் வந்திருந்தனர். நகராட்சித் தலைவர் அலுவலகத்தில் கருணாநிதி புகைப்படத்தை வைக்கப் போவதாக கூறியுள்ளனர். மேலும் நகராட்சித் தலைவர் அலுவலகத்திற்குள்ளும் அவர்கள் புகுந்தனர்.
இதையடுத்து நகராட்சி அலுவலக வளாகத்தில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே, செய்தி சேகரிப்பதற்காக வந்த செய்தியாளர்களை உள்ளே அனுமதிக்க வேண்டாம் என்று நகராட்சித் தலைவர் செல்வராஜ் உத்தரவிட்டுள்ளார். இதனால் செய்தியாளர்கள் கடும் அதிருப்தியுடன் வெளியில் காத்துள்ளனர்.
இந்த நிலையில் செய்தியாளர்களுக்குத் தடை விதிக்கப்பட்டதைக் கண்டித்தும், போலீஸார் குவிக்கப்பட்டதைக் கண்டித்தும் திமுக கவுன்சிலர்கள் வெளிநடப்புச் செய்தனர். இதனால் தொடர்ந்து பதட்டம் நிலவுகிறது.
முன்னதாக இதுவரை இல்லாத அளவுக்கு செய்தியாளர்களுக்குத் தடைவிதித்தது ஏன், போலீஸாரைக் குவித்துள்ளது ஏன் என்று திமுக கவுன்சிலர்கள் நகராட்சித் தலைவரிடம் கேள்வி எழுப்பினர். ஆனால் அதற்கு அவர் பதிலளிக்கவில்லை.