தான் போட்டியிடும் தொகுதிகளை முடிவு செய்தது திமுக?
சென்னை: தேமுதிக வந்தால் சரி, வராவிட்டாலும் பரவாயில்லை என்ற முடிவுக்கு வந்து விட்ட திமுக தற்போது காங்கிரஸுடன் தொகுதிகள் ஒதுக்கீடு தொடர்பாக தீவிரப் பேச்சுக்களில் இறங்கியுள்ளதாக தெரிகிறது.
இதுதொடர்பாக இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்தப் பேச்சும் நடைபெறவில்லை. குழுக்கள் அமைக்கப்படவில்லை. இருப்பினும் தனது கூட்டணியில் இணைந்துள்ள காங்கிரஸ் மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளை திமுக ஏற்கனவே முடிவு செய்து விட்டதாக தெரிகிறது.
தேமுதிக வந்தால் இந்தத் தொகுதிப் பிரிப்பில் மாற்றம் இருக்கலாமாம். அப்படி வராவிட்டால் திட்டமிட்டபடி தொகுதிகள் பிரித்துக் கொடுக்கப்பட்டு அறிவிக்கப்படுமாம்.
சட்டசபைத் தேர்தல்
தமிழக சட்டசபையின் ஆயுள் காலம் முடிவடையப் போகிறது. இதையடுத்து தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக கட்சிகள் தயாராகி வருகின்றன.
கூட்டணி
கூட்டணிகளை ஒவ்வொரு கட்சியும் உறுதிப்படுத்தி வருகிறது. அதிமுகவைப் பொறுத்தவரை அக்கட்சி மட்டுமே உள்ளது. கூடவே சில குட்டிக் கட்சிகளும் உள்ளன.
திமுக கூட்டணி
திமுக கூட்டணியில் இதுவரை காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகியவை சேர்ந்துள்ளன. தேமுதிகவை எதிர்பார்த்துள்ளனர். ஆனால் வர வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.
மக்கள் நலக் கூட்டணி
மக்கள் நலக் கூட்டணி மட்டுமே இப்போதைக்கு தமிழ்நாட்டில் தெளிவாக உள்ள ஒரே கூட்டணியாக திகழ்கிறது. மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், இரு கம்யூனிஸ்ட் கட்சிகள் இதில் இடம் பெற்றுள்ளன. போனஸாக, தேமுதிகவை எதிர்பார்த்துள்ளனர்.
பாஜக - பாமக
தேசிய ஜனநாயகக் கூட்டணி கலகலத்துப்ப போய்க் கிடக்கிறது. யாருடன் கூட்டணி வைக்கப் போகிறார்கள் என்று அவர்களுக்கே தெரியவில்லை. எல்லாமே தெளிவித்தா நிலையாக மாறியுள்ளது பாஜகவில். பாமகவைப் பொறுத்தவரை தனித்துப் போட்டி என்று கூறி விட்டனர்.
திமுகவில் தொகுதிப் பங்கீடு
இந்த நிலையில் திமுகவில் தொகுதிப் பங்கீடு நடந்து வருகிறதாம். முதலில் திமுக தான் போட்டியிடும் தொகுதிகளை அடையாளம் கண்டு வருகிறதாம்.
வெள்ளமெல்லாம் நமக்கு
இதில் ஒரு முக்கிய நடவடிக்கையாக தமிழகத்தில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி விட்டுச் சென்ற வெள்ளம் பாதித்த சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் திமுக பெருளவிலான தொகுதிகளில் போட்டியிடத் திட்டமிட்டுள்ளதாம். முதலில் மொத்தமாக நிற்க யோசித்தார்களாம். ஆனால் தற்போது சில தொகுதிகளை மட்டு்ம் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாம்.
காங்கிரஸின் எதிர்பார்ப்பு
வெள்ளம் பாதித்த பகுதிகளில் உள்ள சில தொகுதிகளை காங்கிரஸும் எதிர்பார்க்கிறதாம். ஆனால் அதற்கு வாய்ப்பில்லை என்று திமுக தரப்பில் கூறப்படுகிறதாம். இருப்பினும் இதுகுறித்து பிரச்சினை எதுவும் வரவில்லை என்றும் பேசி முடிவெடுக்கப்படு் என்றும் கூறப்படுகிறது.
அதிமுக
அதிமுகவைப் பொறுத்தவரை பங்கீடு என்ற பேச்சுக்கே இடமில்லை. தனக்குப் போக மிச்சம் மீதி உள்ள இடங்களை கூட்டணி என்ற பெயரில் உடன் உள்ள சில குட்டிக் கட்சிகளுக்குக் கொடுக்கும். அதிலும் கூட இரட்டை இலையிலேயே அவர்களை நிற்க வைக்கும் என்பதால் தொகுதிப் பங்கீடு என்ற வாதமே அதிமுகவுக்குப் பொருந்தாது.
தேமுதிக வராவிட்டால் பாமக.. இது பாஜக
பாஜக தரப்பில் தேமுதிகவை எதிர்பார்த்துள்ளனர். அப்படி வராமல் போனால் அக்கட்சி தனித்து விடப்படும். எனவே துணைக்கு பாமகை அழைத்து வந்து கூட்டாக போட்டியிடும் திட்டத்தில் உள்ளனராம். இதற்குக் கடைசி நேரத்தில் பாமகவும் சம்மதிக்கலாம் என்று சொல்கிறார்கள்.