பாமக பரப்புரையில் துரைமுருகன் என்ட்ரி! அப்போ பாலு பேச பேச.. அதுக்கு கொடுத்த ரியாக்ஷன் தான் அல்டிமேட்
ராணிப்பேட்டை: பாமக வேட்பாளர் பாலு பிரச்சாரம் செய்து கொண்டு இருந்த பகுதி வழியாக திமுக மூத்த தலைவரும் அமைச்சருமான துரைமுருகன் சென்ற போது அங்குக் கலகல சம்பவம் நடந்தது.
நமது நாட்டில் மொத்தம் ஏழு கட்டமாக லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை தேர்தல் நடக்கும் நிலையில், ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

தமிழ்நாட்டில் இருக்கும் 40 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. வாக்குப்பதிவுக்கு சில நாட்கள் மட்டுமே இருப்பதால் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளன.
லோக்சபா தேர்தல்: தேசியளவில் இந்த முறை பாஜகவின் என்டிஏ கூட்டணிக்கும் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணிக்கும் இடையே தான் போட்டி நிலவுகிறது. அதேநேரம் தமிழ்நாட்டில் திமுக, அதிமுக, பாஜக என்று மும்முனை போட்டி நிலவுகிறது. அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டுள்ளதால் பிரச்சார களத்தில் அனல் பறக்கிறது. இதற்கிடையே ராணிப்பேட்டை அருகே பிரச்சார களத்தில் நடந்த ஒரு கலகல சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

கலகல சம்பவம்: அரக்கோணம் தொகுதியில் பாஜக கூட்டணியில் பாமக சார்பில் பாலு களமிறங்குகிறார். இதற்காக அவர் அரக்கோணம் தொகுதிக்கு உட்பட்ட ராணிப்பேட்டை தொகுதியில் பிரச்சாரம் செய்து கொண்டு இருந்தார். சரியாக அந்த நேரம் பார்த்து திமுக மூத்த தலைவரான துரைமுருகன் காரில் அந்த பக்கம் வந்துள்ளார். பாலு பிரச்சாரம் செய்து வருவதைப் பார்த்து துரைமுருகன் கார் மெல்ல நின்றது. அப்போது திடீரென மைக்கை பிடித்த பாலு பேசியது தான் இங்கே ஹைலைட்.
துரைமுருகனைப் பார்த்தவுடன் பாலு, "அண்ணன் துரைமுருகன் உங்கள் ஆசீர்வாதம் மற்றும் அருளைத் தர வேண்டும். வெற்றி பெற வேண்டும் என்ற வாழ்த்த வேண்டும். உங்கள் அருளால் நிச்சயம் இந்தத் தொகுதியில் வெற்றி பெறுவேன். வென்றவுடன் அண்ணனை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்துக் கொள்வேன்" என்று கூறினார்.
ரியாக்ஷன்: துரைமுருகன் வந்தவுடன் பாலு இப்படிப் பேசுவார் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. இதனால் அங்கே சற்று சிரிப்பலை எழுந்தது. அதிலும் பாலு பேசுவதைக் கேட்டு துரைமுருகன் கொடுத்த ரியாக்ஷன் தான் அல்டிமேட்.. என்னப்பா என்னை வைத்து ஸ்கோர் பண்ண பார்க்கிறியா என்பது போலவே அவரது ரியாக்ஷன் இருந்தது. சில நொடிகள் அங்கிருந்த துரைமுருகன், பிறகு அப்படியே கிளம்பினார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
அரக்கோணம் லோக்சபா தொகுதி: அரக்கோணம் தொகுதியில் இந்த முறை திமுக சார்பில் ஜெகத்ரட்சகன் போட்டியிடுகிறார். ஜெகத்ரட்சகன் ஏற்கனவே 3 முறை வென்ற தொகுதி இதுவாகும். இங்கே அதிமுக சார்பில் விஜயன் போட்டியிடும் நிலையில், பாஜக கூட்டணியில் பாமக சார்பில் பாலுவும் களம் காண்கின்றனர். இந்தத் தொகுதியில் போட்டி கடுமையாக இருக்கும் என்றே சொல்லப்படுகிறது.
கடந்த லோக்சபா தேர்தலில் அரக்கோணத்தில் திமுக சார்பில் களமிறங்கிய ஜெகத்ரட்சகன் சுமார் 6.7 லட்சம் வாக்குகளைப் பெற்று 3.2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். அவருக்கு எதிராகப் போட்டியிட்ட பாமகவின் மூர்த்தி 3.4 லட்சம் வாக்குகளை மட்டுமே பெற்றார்.












Click it and Unblock the Notifications