விருதுநகரில்.. வைகோவை எதிர்த்து வர்த்தக சபைத் தலைவரை நிறுத்திய திமுக!
சென்னை விருதுநகர் தொகுதி திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள எஸ்.ரத்தினவேல், தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் தலைவராக இருக்கிறார்.
விருதுநகரில்தான் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ போட்டியிடப் போவதாக செய்திகள் ஏற்கனவே உலா வரும் நிலையில் அவருக்கு எதிராக நாடார் சமுதாயத்தைச் சேர்ந்த வலிமையான ஒருவரை திமுக களம் இறக்கியுள்ளது.
சமீபத்தில்தான் திமுக தலைவர் கருணாநிதியைச் சந்தித்துப் பேசியிருந்தார் ரத்தினவேல். இந்த நிலையில் அவருக்கு தற்போது எம்.பி. சீட்டைக் கொடுத்துள்ளது திமுக.

தமிழகத்தின் மிகப் பழமையான தொழில் வர்த்தக சங்கங்களில் ஒன்றுதான் தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம். மதுரையில் இது செயல்பட்டு வருகிறது. இதன் தலைவராக நீண்ட காலம் பணியாற்றியவர் ரத்தினவேல். தற்போது முதுநிலை தலைவராக இவர் இருக்கிறார்.
இவர் தற்போது திமுக சார்பில் விருதுநகரில் போட்டியிடும் வாய்ப்பைப் பெற்றுள்ளார். இதன் மூலம் முதல் முறையாக அரசியலுக்கும் காலடி எடுத்து வைத்துள்ளார்.
அரசியல் சாராத தளத்தில் பிரபலமாக இருந்து பின்னர் அரசியலுக்கு வந்த வெகு சில நாடார் சமூகப் பிரபலங்களில் ஒருவர்தான் ரத்தினவேலு. இதற்கு முன்பு மாஃபா பாண்டியராஜன், அரசியல் சாராத தளத்தில் பிரபலமாக இருந்தவர். அவர் பின்னர் தேமுதிகவில் இணைந்து போட்டியிட்டு எம்.எல்.ஏ ஆனார் என்பது நினைவிருக்கலாம்.
அந்த வகையில் தற்போது மதுரை மற்றும் தென் தமிழகத்தில் மிகவும் பிரபலமான வர்த்தக சபைத் தலைவரான ரத்தினவேலுவுக்கு சீட் கொடுத்ததன் மூலமாக திமுக, ஒரே கல்லில் பல மாங்காய்களை அடித்துள்ளதாக கருதப்படுகிறது.
விருதுநகரில் நாடார் சமுதாயத்தினர் அதிகம் உள்ளனர். எனவே அந்த சமூகத்தைச் சேர்ந்த பிரபலத்தை குறிப்பாக வர்த்தகர்கள் மத்தியில் மிகப் பிரபலமான, செல்வாக்கான ரத்தினவேலுவை வேட்பாளராக்கியதன் மூலம் நாடார் சமுதாயத்தினர் மட்டுமல்லாமல், வர்த்தகர்கள் மத்தியிலும் தனக்கான ஆதரவை திமுக பெருக்கியுள்ளதாக கருதப்படுகிறது.
மதுரையிலும் தென் தமிழகத்திலும் நல்ல பெயரை ஈ்ட்டி வைத்திருப்பவர் ரத்தினவேலு என்பதால் அவர் மீதான கிளீன் இமேஜ் விருதுநகரில் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த வர்த்தகர் சமுதாயத்தின் மத்தியிலும் தனது கட்சிக்கு நல்ல பெயரையும், வாக்குகளையும் வாங்கித் தரும் என்பது திமுகவின் எண்ணமாகும்.
மார்ச் 7ம் தேதிதான் திமுக தலைவர் கருணாநிதியை நேரில் சந்தித்துப் பேசினார் ரத்தினவேலு. அப்போது, சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிக்க கூடாது என்ற கோரிக்கையை கழக தேர்தல் அறிக்கையில் சேர்த்திட வலியுறுத்தி அவர் கருணாநிதியிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
அப்படி கோரிக்கை விடுத்தவரையே கட்சி வேட்பாளராக்கியுள்ளதன் மூலம் வர்த்தகர்களின் ஒட்டுமொத்த அன்பையும், நட்புணர்வையும் திமுக வாரியுள்ளதாக கருதப்படுகிறது.












Click it and Unblock the Notifications