இது தான் ஜனநாயகம்.. திமுக உட்கட்சி தேர்தலில் அடிதடி, மண்டை உடைப்பு
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் நடந்த தி.மு.க. உட்கட்சி தேர்தலின்போது, இரு பிரிவினரிடையே ஏற்பட்ட அடிதடி மோதலில் இரண்டு பேருக்கு மண்டை உடைந்து காயம் ஏற்பட்டது. கலாட்டாவில் ஈடுபட்ட திமுகவினர் மீது போலீசார் அடிதடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகமெங்கும் தி.மு.க உட்கட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது. விழுப்புரம் மாவட்டத்துக்குட்பட்ட 12 ஒன்றியம், 2 நகரத்திற்கான உட்கட்சி தேர்தல் நேற்று விழுப்புரம் கலைஞர் அறிவாலத்தில் நடைபெற்றது.
இதில், விக்கிரவண்டி, மைலம் ஆகிய ஒன்றியத்திற்கும், விழுப்புரம் நகர பதவிக்கும் மாவட்ட செயலாளர் பொன்முடி நிறுத்திய வேட்பாளர்களுக்கு எதிராக, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் புஷ்பராஜ் தனது ஆதரவாளர்களை நிறுத்தியிருந்தார்.
புஷ்பராஜ் நிறுத்திய வேட்பாளர்களுக்கு அவரது ஆதரவாளர்கள் ஓட்டளிக்க சென்றுள்ளனர். அப்போது, தலைமை கழகத்தில் இருந்து வந்திருந்த ஆணையர், புஷ்பராஜ் ஆதரவாளர்களை ஓட்டளிக்க விடாமல் தடுத்தாக கூறப்படுகிறது.
இதையடுத்து, புஷ்பராஜ் ஆதரவாளர்கள் புகார் தெரிவிக்கப் போவதாக கூறியதையடுத்து ஆணையர் அவர்களை வாக்களிக்க அனுமதித்துள்ளார்.
இதையடுத்து, ஒவ்வொரு ஒன்றியத்துக்கும் 40 மேற்பட்ட புஷ்பராஜ் ஆதரவாளர்கள் ஓட்டளித்ததாக கூறப்படுகிறது. ஆனால், அணையர் புஷ்பராஜ் தரப்பில் ஒவ்வொரு ஒன்றியத்துக்கும் எட்டு ஓட்டுகள் மட்டுமே விழுந்துள்ளதாகவும், பொன்முடி நிறுத்திய வேட்பாளர்கள் அனைவரும் வெற்றி பெற்றுள்ளதாகவும் அறிவித்தார்.
இதனால் புஷ்பராஜ் ஆதரவாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதைத்தொடர்ந்து, தேர்தலை ரத்து செய்ய வேண்டும் எனக்கூறி புஷ்பராஜ் தலைமையிலான நிர்வாகிகள், திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை காவல்துறையினர் சமாதானப்படுத்தினர். இதையடுத்து, கலைந்து சென்ற அவர்கள், தேர்தல் முறைகேடு குறித்து தி.மு.க. தலைமையிடம் புகார் தெரிவிக்கப்போவதாக கூறி புஷ்பராஜ் தலைமையில் சென்னை புறப்பட்டுச் சென்றுள்ளனர்.
கற்கள் வீச்சு
அதேபோல், உளுந்தூர்பேட்டை வடக்கு ஒன்றியத்துக்காக நடைபெற்ற தேர்தலில் ராஜவேல், ஆசிர்வாதம் ஆகியோர் போட்டியிட்டனர். இவர்கள் இருவருக்கும் ஏற்கனவே முன்பகை இருந்து வந்துள்ளது. இந்த நிலையில், வாக்குப்பதிவின் போது இரு தரப்பினருக்கும் இடையே அடிதடி ஏற்பட்டது. அப்போது இரு தரப்பினரும் ஒருவரையொருவர் கற்களை வீசி தாக்கிக்கொண்டார்கள்.
இதையடுத்து, காவல்துறையினர் இருதரப்பினர் மீதும் தடியடி நடத்தி, அவர்களை கலைத்தனர். இந்த மோதலில் தலையில் பலத்த காயமடைந்த அபி, ஜான் ஆகிய இருவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே, ஓட்டு பெட்டியை விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்துக்கு கொண்டு வந்த தேர்தல் அதிகாரிகள், பொன்முடி ஆதரவாளர் ராஜவேல் வெற்றி பெற்றதாக அறிவித்தனர்.இதனால் ஆசீர்வாதம் தரப்பினர் அதிர்ச்சியடைந்தனர்.