நாடாளுமன்றத்தில் காமன்வெல்த் பற்றி விவாதம் வந்தால் திமுக பங்கேற்கும்: கருணாநிதி
சென்னை: இலங்கை கமான்வெல்த் மாநாட்டில் மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித் கலந்து கொண்டது பற்றிய விவாதம் நாடாளுமன்றத்தில் நடைபெற்றால் திமுக எம்.பிக்களும் கலந்து கொள்வர் என்று அக்கட்சித் தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு திமுக தலைவர் கருணாநிதி பதிலளித்தார்.
காமன்வெல்த் விவகாரம், கெயில் பிரச்சனை, ஏற்காடு மோதல் போன்ற பல்வேறு கேள்விகளுக்கு கருணாநிதி அளித்த பதில்கள்:
காமன்வெல்த் விவாதம்
செய்தியாளர்: மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித் இலங்கை சென்றது பற்றி வருகின்ற நாடாளுமன்ற குளிர் காலக் கூட்டத் தொடரில் விவாதம் வருமென்று சொல் கிறார்களே?
பதில்: அப்படியொரு விவாதத்திற்கு அங்கே அனுமதிக்கப்படுமானால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எங்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அங்கே விவாதத்தில் பங்கேற்பார்கள்.
கெயில் எரிவாயு குழாய்கள்
செய்தியாளர் - "கெயில்" எரிவாயு குழாய்கள் பதிக்கும் பிரச்சினையில் இரு தரப்பினருடன் பேசி சுமூகமான முடிவெடுக்க வேண்டுமென்று சொல்லியிருந்தீர்கள். ஆனால் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருக்கிறதே?
பதில் : நாட்டின் பொருளாதாரம் அல்லது விஞ்ஞான வளர்ச்சிக்காக சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. விவசாயத் துறையின் வளர்ச்சிக்காக இயந்திர மயம் என்ற பெயரால் சில காரியங்கள் நடக்கின்றன. அதேநேரத்தில் விவசாயத்திற்கு கேடு விளைவிக்காமல் இருக்க மற்ற துறையினரும், தொழில் துறையினரும் அக்கறை காட்ட வேண்டும்.
அதனால் தான் இரு சாராரும் பேச்சுவார்த்தை நடத்தி அதனை ஒருமுனைப்படுத்த வேண்டும் என்று நான் தெரிவித்தேன்.
மின்வெட்டுக்கு திமுக மீது பழி
செய்தியாளர்: மின் வெட்டு ஏற்படும் போதெல்லாம், முதலமைச்சர் ஜெயலலிதா தி.மு. கழகத்தின் மீது பழி போடுகிறாரே? மேலும் மத்திய அரசும், தி.மு. கழகமும் சேர்ந்து சதி செய்வதாகச் சொல்லியிருக்கிறாரே?
பதில்: அது அவர்களுடைய வாடிக்கை. தாங்கள் செய்கிற தவறை மறைக்க பிறர் மீது பழி போடுவது என்பது ஜெயலலிதாவுக்கு இன்று நேற்றல்ல; என்றுமே வாடிக்கை.
சென்னையில் மின்வெட்டு
செய்தியாளர்:- தமிழகம் முழுவதும் மீண்டும் மின்வெட்டு நடைமுறைக்கு வந்து விட்டதே; சென்னையிலேயே அன்றாடம் இரண்டு மணி நேரம் மின்வெட்டு செய்யப்படுகிறதே?
பதில்: சந்தோஷம்!
செய்தியாளர்கள் மீது தாக்குதல்
செய்தியாளர்: நேற்றையதினம் "கேப்டன்" தொலைக் காட்சியைச் சேர்ந்த செய்தியாளர்களை ஒரு குழுவினர் சேர்ந்து அடித்திருக்கிறார்கள். ஆனால் காவல் துறையினர் தொலைக்காட்சி நிறுவனத்தைச் சேர்ந்தவர்களையே கைது செய்திருக்கிறார்கள். 200 பேருக்கு மேல் பத்திரிகையாளர்களை போலீசார் கைது செய்திருக்கிறார்களே?
பதில்: இதனை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
ஏற்காடு மோதலில் திமுக இளைஞர் பலி
செய்தியாளர்: நேற்றையதினம் அ.தி.மு.க. வினர் நடத்திய மோதல் காரணமாக திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் ஏற்காட்டில் பலியாகியிருக்கிறாரே?
பதில்: அவரது மறைவுக்குக் காரணம், அ.தி.மு.க. வா, வேறு யாராவதா என்று நான் குற்றஞ்சாட்ட விரும்பவில்லை. பொதுவாக போலீசார் தி.மு. கழகக் கூட்டம் நடைபெற்ற இடத்தில், கூட்டம் நடத்துவதற்கு அனுமதி கொடுத்து விட்டு, அதே இடத்தில் அ.தி.மு.க.வினர் ஊர்வலம் வர எப்படி அனுமதித்தார்கள்?
தி.மு. கழகக் கூட்டம் நடைபெற்ற அதே இடத்திற்கு அ.தி.மு.க. வினர் ஊர்வலம் வர காவல் துறை அனுமதி கொடுத்த காரணத்தால் தான், இரு தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டு, அதில் தி.மு. கழகத்தைச் சேர்ந்த ராஜமுருகன் என்பவர் மின்சாரம் தாக்கி கொல்லப்பட்டிருக்கிறார். இது காவல் துறையினரின் கவனக் குறைவா அல்லது இரண்டு நிகழ்ச்சிகளுக்கு ஒரே நேரத்தில் அனுமதி கொடுத்து அல்லது வழி விட்டு நடத்த அனுமதித்ததன் விளைவா? இதற்குக் காரணமாக போலீசார் இருந்ததால் ஒரு இளைஞனைத் திராவிட முன்னேற்றக் கழகம் பலி கொடுத்திருக்கிறது.
இவ்வாறு கருணாநிதி பதிலளித்தார்.