அழகிரி நடவடிக்கைகளால் திமுகவிற்குள் நிலவுகிறதா பெரும் பதற்றம்? பின்னணி காரணம் என்ன?
Recommended Video
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் உண்மை விசுவாசிகள் தன் பக்கம் தான் இருப்பதாக அவரது மகனும், முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரி தெரிவித்த கருத்து திமுகவில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.
கடந்த 14-ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற திமுகவின் அவசர செயற்குழு கூட்டம் இதற்கான சமிக்கைகளை கொடுத்தது.
கருணாநிதியின் நினைவிடத்தில் ஆகஸ்ட் 13ம் தேதி, அஞ்சலி செலுத்திய அழகிரி, கருணாநிதியின் உண்மை விசுவாசிகள் தன் பக்கம் இருப்பதாகவும், தனது ஆதங்கத்தை கருணாநிதியிடம் தெரிவித்ததாகவும் கூறியிருந்தார்.
தர்மயுத்தம்
அழகிரியின் இந்த பேட்டி, அதிமுகவில் ஓ பன்னீர்செல்வம் தனியாக பிரிந்து சென்று தர்மயுத்தம் என்ற பெயரில் அரசியல் செய்ததை ஒப்பீடு செய்வது போல இருந்தது. பன்னீர்செல்வத்துக்கு அதிமுகவில் அப்போது இருந்த ஆதரவுக்கும், அழகிரிக்கு, திமுகவில் இருக்கும் ஆதரவுக்கும் நடுவே நிறையவே வேறுபாடு இருப்பதால் ஸ்டாலின் தரப்புக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்றுதான் முதலில் கருத்துக்கள் எழுந்தன.
செயற்குழு கூட்டம்
ஆனால் திமுக அவசர செயற்குழுக் கூட்டத்தில், அழகிரியின் கருத்து, கட்சிக்குள் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது என்ற தோற்றம் எதிரொலித்தது. அழகிரியின் பேட்டி குறித்து செயற்குழுவில் உரையாற்றிய எந்த நிர்வாகியும் அல்லது செயல் தலைவர் ஸ்டாலினும் நேரடியாக எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்கவில்லை என்ற போதிலும், மறைமுகமாக திமுகவுக்குள் ஏற்படுத்திய தாக்கம் அந்தக் கூட்டத்தில் வெளிப்படத்தான் செய்தது.
சுப்புலட்சுமி ஜெகதீசன் பகிரங்க குற்றச்சாட்டு
திமுகவின் மூத்த நிர்வாகி சுப்புலட்சுமி ஜெகதீசன், திமுகவை மத்திய அரசு பிளக்க, முயற்சி செய்வதாகவும், இனத் துரோகிகள் ஒரு பக்கம் இதை செய்வதாகவும் கருத்து தெரிவித்தார். இதேபோல கூட்டத்தில் பேசிய துரைமுருகன் உள்ளிட்ட பல்வேறு மூத்த நிர்வாகிகளும் திமுகவின் அடுத்த தலைவர் ஸ்டாலின் தான் என்று தெரிவித்தனர். கருணாநிதிக்கு இரங்கல் தெரிவிப்பதற்காக மட்டுமே கூட்டப்பட்ட கூட்டத்தில் இது பற்றிய கருத்துக்கள் எல்லாம் பேச வேண்டிய தேவை இருக்கவில்லை. ஆனால் அழகிரி மூவ், திமுகவில் சலசலப்பை ஏற்படுத்தி இவ்வாறு பேச வைத்துள்ளது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
இயக்குபவர்கள்
திமுகவின் அனைத்து மாவட்ட செயலாளர்களும், எம்எல்ஏக்களும் ஸ்டாலினுடன் கரம் கோர்த்து விட்ட நிலையில் அழகிரியால் என்ன செய்துவிட முடியும் என்பதே சாமானியர்களின் பார்வையில் இருந்த கேள்வி. ஆனால், திமுகவில் ஏற்பட்டுள்ள, பரபரப்புக்கும், பதட்டத்திற்கும் என்ன காரணம் என்ற கேள்வி எழுகிறது. அதற்கும் சுப்புலட்சுமி ஜெகதீசன் பேச்சில்தான் விடை உள்ளது. அழகிரியை இயக்குவது வேறு ஒரு இடம், அந்த இடம் மிக வலிமையானது என்பது தான் சுப்புலட்சுமி ஜெகதீசன் பேச்சில் இருக்கும் உட்கருத்து. "திமுக நிர்வாகிகள், அழகிரிக்காக பயப்படவில்லை. அழகிரியை இயக்கும் ஒரு சக்திக்காக பயப்படுகிறார்கள். ஆகவே செயற்குழு கூட்டத்தில் எச்சரிக்கை தொனிகள் எதிரொலித்தன" என்றார் ஒரு நிர்வாகி.
பதற்றம் உண்மைதானா?
ஆனால் இதுகுறித்து திமுக நிர்வாகிகளிடம் கேட்டபோது, அழகிரியின் பேட்டியை மீடியாக்கள் மிக அதிக அளவில் முக்கியத்துவம் கொடுத்து ஒளிபரப்பு செய்ததன், விளைவாக பொதுமக்களிடம் ஏற்பட்ட சில ஐயப்பாடுகளை நீக்குவதற்காக செயற்குழு கூட்டத்தில் ஸ்டாலினை முன்னிறுத்தி பேச வேண்டியதாயிற்று. மற்றபடி, அழகிரி மீது எந்த பயமும் கிடையாது என்று தெரிவித்தனர். ஆனால் திமுகவின் உள்ளும் புறமும் உள்ள சவால்களை வெல்வோம் என்று, ஆகஸ்ட் 15ஆம் தேதி தொண்டர்களுக்கு ஸ்டாலின் ஒரு கடிதம் எழுதினார். சவாலே இல்லாத தலைவன் தான் ஸ்டாலின் என்று திமுக நிர்வாகிகள் கூறிவரும் நிலையில், சவால் இருப்பதாகவும் அதை முடிப்பதாகவும் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதம் அழகிரி செயல்பாடுகளுக்கான பதிலடியாகவே பார்க்கப்படுகிறது. இது திமுகவில் உள்ள பதற்றத்தையும் வெளிப்படுத்துகிறது.