பெங்களூரு குண்டுவெடிப்பில் பலியான பவானி குடும்பத்துக்கு ரூ1 லட்சம் நிதி வழங்கினார் ஜெ. அன்பழகன்
சென்னை: பெங்களூரு குண்டுவெடிப்பில் பலியான சென்னை பெண் பவானிதேவி குடும்பத்துக்கு தி.மு.க. எம்.எல்.ஏ. ரூ1 லட்சம் நிதி உதவி வழங்கினார்.
பெங்களூரு சர்ச் சாலையில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் தலையில் படுகாயமடைந்த சென்னையைச் சேர்ந்த பவானிதேவி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது குடும்பத்துக்கு கர்நாடகா மாநில அரசு ரூ5 லட்சம் நிதி உதவி வழங்கியது.
அதே நேரத்தில் தமிழக அரசு இரங்கலோ ஆறுதலோ நிதி உதவியோ வழங்கவில்லை. இது தொடர்பாக சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏவான தி.மு.க.வின் ஜெ. அன்பழகன் நேற்று தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு அனுப்பிய கடிதத்தில் பவானிதேவி குடும்பத்துக்கு நிதி உதவி வழங்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்நிலையில் சென்னை அண்ணாசாலையில் உள்ள பவானிதேவி குடும்பத்தினரை ஜெ. அன்பழகன் இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் பவானிதேவி குடும்பத்துக்கு தமது சொந்தப் பணத்தில் இருந்து ரூ1 லட்சம் நிதி உதவி வழங்கினார்.