ஆளுநர் உரையை கிழித்து எறிந்த திமுக எம்.எல்.ஏ. கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட்
சென்னை: சட்டசபையில் ஆளுநர் உரையை கிழித்து எறிந்த திமுக எம்.எல்.ஏ. சிவசங்கர் இந்தக் கூட்டத் தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
தமிக சட்டசபை நேற்று ஆளுநர் உரையுடன் துவங்கியது. இதையடுத்து இன்று சபை கூடியதும் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்து உறுப்பினர்கள் பேசினார்கள். அப்போது அதிமுக உறுப்பினர் மார்க்கண்டேயன் எழுந்து திமுக தலைவர் கருணாநிதி, அவரது மகன் அழகிரி இடையேயான மோதல் குறித்து பேசினார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் சபாநாயகர் தனபாலின் இருக்கையை முற்றுகையிட்டு மார்க்கண்டேயன் பேசியதை அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று கூறி கோஷமிட்டனர்.
அப்போது அரியலூர் மாவட்டம் குன்னம் தொகுதி திமுக எம்.எல்.ஏ.வான சிவசங்கர் ஆளுநர் உரையின் நகலை கிழித்து எறிந்தார். இதையடுத்து அமளியில் ஈடுபட்ட திமுகவினர் சட்டசபையில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
இந்நிலையில் வெளியேற்றப்பட்ட திமுக உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுகவினர் வலியுறுத்தினார்கள். அப்போது அவை முன்னவரான ஓ. பன்னீர்செல்வம் திமுக எம்.எல்.ஏ. சிவசங்கரை சஸ்பெண்ட் செய்ய கோரிக்கை விடுத்தார். அவரின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட சபாநாயகர் தனபால் சிவசங்கரை கூட்டத் தொடர் முழுதும் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.