அதிமுகவின் அக்கப் போர் களேபரங்கள்... மக்கள் எதிர்பார்ப்பது 'இவரைத்தான்'
கடந்த ஒரு வாரகாலமாகவே அதிமுகவின் நள்ளிரவு நாடங்கள் அரங்கேறிய நிலையில் மக்கள் மனதில் குறையை ஏற்படுத்தியது கருணாநிதியின் அரசியல் தலையீடு இல்லாததுதான்.
சென்னை: அதிமுகவின் உள்கட்சி பூசல் அரங்கேறி தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்படுத்தி வரும் நிலையில் திமுக தலைவர் கருணாநிதியின் அரசியலை பார்க்க முடியவில்லை என்பது மக்களின் ஆதங்கம்.
அதிமுகவின் அமைச்சர்கள் கடந்த 18-ந் தேதி ஒன்று கூடி ஆலோசனை தொடங்கியதில் இருந்து 20-ந் தேதி இரவு டிடிவி தினகரனுக்கு டெல்லி போலீஸ் சம்மன் கொடுத்தது வரை ஒரு வாரமாகவே அதிமுகவின் நள்ளிரவு நாடகங்கள் படுஜோராக நடைபெற்று மீடியாக்களுக்கு ஓயாத வேலை கொடுத்தன. 24 மணி நேர செய்தி சேனல்கள் விடிய விடிய கொட்டித்தீர்த்தன தகவல்களை.

கருணாநிதி
ஆனால் இவை அனைத்துமே அதிமுகவைப் பற்றியதாக மட்டுமே இருந்தன. இந்த பரபரப்பு அரசியலில் பொதுமக்களிடையே ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தியது திமுக தலைவர் கருணாநிதியின் பங்கேற்பு இல்லாதது.

வார்த்தை ஜாலம்
அதிமுகவின் உள்கட்சி விவகாரம் இதில் என்ன கருத்து கூற முடியும் என ஸ்டாலின் ஒதுங்கிக் கொள்ளலாம். ஆனால் கருணாநிதியின் நறுக் வார்த்தை ஜாலம், அதிமுகவில் நடக்கும் உள்கட்சிப் பூசல்களுக்கு கடந்த கால நிகழ்வுகளை நினைவுபடுத்திக் கூறும் சிந்தனைத் திறன், அவருக்கே உரித்தான வார்த்தை ஜாலம் இவை அரசியல் சூழலை மேலும் சுவாரஸ்யமாக்கியிருக்கும் என்று பலரும் கருதுகின்றனர்.

கருணாநிதி ஓய்வு
92 வயது பழம்பெரும் அரசியல்வாதியான கருணாநிதி உடல்நலக் கோளாறு காரணமாக வீட்டிலேயே உள்ளார். ஜெயலலிதாவின் மறைவுக்கு அடுத்து அரசியலிலும் தமிழக அரசிலும் அடுத்ததடுத்து மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. இத்தகைய சூழலில் எதிர்க்கட்சியின் நடவடிக்கைகளை அனைவரும் உற்று நோக்கி வருகின்றனர்.

விரைவில்...
எனவே நெருக்கடியான இப்படியொரு கால கட்டத்தில் தமிழக அரசியல் நிலவரம் குறித்து கருணாநிதியின் தீவிர மற்றும் ராஜதந்திர அரசியலை பார்கக முடியாதது மக்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாகவே உள்ளது. விரைவிலேயே கருணாநிதியின் அரசியல் அரங்கேறும் என்பது மக்களின் எதிர்பார்ப்பு.












Click it and Unblock the Notifications