குறுநில மன்னர்களுக்கு செக்.. மா.செ.கள் ஏரியாக்களை பறிக்கும் ஸ்டாலின்! இளந்தாரிகளுக்கு மெகா வாய்ப்பு!
சென்னை: 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்குப் பிறகு, கட்சியை மீண்டும் வலுப்படுத்தும் நடவடிக்கைகளில் திமுக தீவிரமாக இறங்கியுள்ளது. அதில் முக்கியமானதாக, தற்போது உள்ள 78 மாவட்ட செயலாளர்கள் எண்ணிக்கையை 100 ஆக உயர்த்தும் திட்டத்தை திமுக தலைமை பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக கட்சிக்கு புது ரத்தம் பாய்ச்சும் வகையில் இளைஞர்களுக்கு சரிசமமாக பங்கு வழங்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளதுல்
தமிழக அரசியலில் நீண்ட காலமாக ஆட்சியையும், கட்சியையும் வலுவாக நடத்தி வந்த திமுக, சமீபத்திய சட்டப்பேரவைத் தேர்தலில் எதிர்பாராத பின்னடைவை சந்தித்தது. தமிழக வெற்றிக் கழகத்தின் எழுச்சியால் ஆட்சியை இழந்தது.
இந்த நிலையில், தோல்விக்கான காரணங்களை ஆராய்வதோடு மட்டுமல்லாமல், கட்சியின் அடித்தள அமைப்பையும் புதுப்பிக்க வேண்டிய அவசியம் இருப்பதாக திமுக தலைவர் முக ஸ்டாலின் கருதுகிறார். இதற்காகவே தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு 36 பேர் கொண்ட சிறப்பு கள ஆய்வுக் குழு அமைக்கப்பட்டது.

திமுக
இந்த குழு மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, தொகுதி வாரியாக கட்சி நிர்வாகிகள், முன்னணி உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்களிடம் கருத்துக்களை சேகரித்துள்ளது. இந்த ஆய்வுக் குழு தனது விரிவான அறிக்கையை விரைவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பிக்க உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது உள்ள 78 மாவட்ட செயலாளர்கள் எண்ணிக்கையை 100 ஆக உயர்த்தும் திட்டத்தை திமுக தலைமை பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மாவட்ட செயலாளர்கள்
இதுதொடர்பாக நம்மிடம் பேசிய சில திமுக புள்ளிகள்," தற்போது சில மாவட்ட செயலாளர்களின் கட்டுப்பாட்டில் நான்கு முதல் ஐந்து சட்டப்பேரவைத் தொகுதிகள் வரை உள்ளன. இதனால், ஒவ்வொரு பகுதியையும் நேரடியாக கண்காணிப்பதிலும், அடிமட்ட நிர்வாகிகளை ஒருங்கிணைப்பதிலும் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. குறிப்பாக, கிராமங்கள் மற்றும் வார்டு அளவிலான கட்சி பணிகள் பல இடங்களில் சீராக நடைபெறவில்லை என்ற புகார்கள் அதிகமாக முன்வைக்கப்பட்டுள்ளன.
திமுக மறுசீரமைப்பு
மாவட்ட செயலாளர்களுக்கு அதிக பொறுப்புகள் இருப்பதால், எல்லா பகுதிகளிலும் சம அளவு கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில், பெரிய மாவட்டங்களை இரண்டாக அல்லது மூன்றாக பிரித்து புதிய அமைப்பு மாவட்டங்களை உருவாக்க திமுக தலைமை திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் ஒவ்வொரு மாவட்ட செயலாளரின் கீழ் இரண்டு அல்லது மூன்று தொகுதிகள் மட்டுமே இருக்கும் வகையில் மறுசீரமைப்பு செய்யப்படலாம்" என்கின்றனர்.
இளைஞர் அணி
மாவட்ட செயலாளர்கள் எண்ணிக்கை 100 ஆக உயர்த்தப்பட்டால், தற்போது பதவி கிடைக்காமல் காத்திருக்கும் பல இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட தலைவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். கடந்த சில ஆண்டுகளாக மாவட்ட செயலாளர் பதவிக்காக காத்திருக்கும் பலரும் இந்த மாற்றத்தை வரவேற்கும் நிலையில் உள்ளனர். அதே நேரத்தில், புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படுவதால் இளைஞர் அணியினருக்கும், கட்சிக்காக நீண்ட காலமாக பணியாற்றி வரும் நிர்வாகிகளுக்கும் முக்கிய பொறுப்புகள் வழங்கப்படலாம் என்று திமுக வட்டாரங்கள் கூறுகின்றன.
2026 தேர்தல்
2026 தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு திமுகவுக்குள் நடைபெற்ற ஆலோசனைகளில், கட்சியின் அடித்தள அமைப்பை மேலும் பலப்படுத்த வேண்டும் என்ற கருத்து தொடர்ந்து வலியுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. குறிப்பாக, பல பகுதிகளில் கட்சியின் களப்பணிகள் மந்தமாக இருந்ததாகவும், மக்களுடன் நேரடி தொடர்பு குறைந்ததாகவும் கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அதனால், மாவட்ட அளவிலான நிர்வாக அமைப்பை மறுசீரமைத்து, ஒவ்வொரு பகுதியிலும் கட்சியின் செயல்பாட்டை தீவிரப்படுத்துவது அவசியம் என்ற முடிவுக்கு தலைமை வந்துள்ளதாக தெரிகிறது.
ஸ்டாலின் திட்டம்
அடுத்த கட்டமாக நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலுக்கான முன்னேற்பாடாகவே இந்த அமைப்பு மாற்றம் பார்க்கப்படுகிறது. தேர்தல் தோல்வியால் ஏற்பட்ட பின்னடைவை சரிசெய்து, மீண்டும் அடிமட்டத்தில் கட்சியை வலுப்படுத்தும் முயற்சியாக இந்த நடவடிக்கை கருதப்படுகிறது. கள ஆய்வுக் குழுவின் அறிக்கை கிடைத்த பிறகு, மாவட்ட பிரிப்பு, புதிய மாவட்டங்கள் உருவாக்கம் மற்றும் புதிய மாவட்ட செயலாளர்கள் நியமனம் தொடர்பான அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications