திமுகவில் களத்துக்கு வரும் நெல்லை 'ஆனா', "கானா" வாரிசுகள்
சென்னை: திமுகவில் லோக்சபா தேர்தலில் குதிக்க அரசியல் வாரிசுகள் என்ற பெரும்படையே மும்முரமாக இருக்கிறது.. இவர்களுக்கு சீட் கொடுக்குமா? கொடுக்காதா? என்பதுதான் திமுகவினரிடையே நடைபெறும் லேட்டஸ்ட் பட்டிமன்றமாகவும் இருக்கிறது.
லோக்சபா தேர்தலுக்கு திமுக சார்பில் விருப்ப மனு வாங்கப்பட்டது. அப்போது திமுக மூத்த தலைவர் துரைமுருகன் தமது மகன் கதிர் ஆனந்த் பெயரில் நூற்றுக்கணக்கானோரை விருப்ப மனு கொடுக்க வைத்தார். எப்போதும் கூடவே இருக்கும் துரைமுருகன் இப்படி சொல்லாமல் செய்துவிட்டார் என்று கோபப்பட்டாராம் திமுக தலைவர் கருணாநிதி.'
அதேபோல் திண்டுக்கல் ஐ. பெரியசாமியின் மகன் செந்தில், தூத்துக்குடி பெரியசாமி மகன் ஜெகன், கோவை பொங்கலூர் பழனிச்சாமி மகன் பைந்தமிழ் பாரி ஆகியோரும் விருப்ப மனு கொடுத்திருப்பதையும் நாம் பதிவு செய்திருந்தோம். இப்போது மேலும் பல திமுக அரசியல் வாரிசுகளும் விருப்ப மனு கொடுத்துவிட்டு எம்.பி. சீட்டு கிடைத்துவிடும் என காத்திருக்கின்றனர்.

"ஆனா" மகன் பிரபாகரன்
திருநெல்வேலி தொகுதியை கேட்டு முன்னாள் சபாநாயகரான "ஆனா" என்ற ஆவுடையப்பன் மகன் பிரபாகரன் மனு கொடுத்திருக்கிறாராம். அதே தொகுதியை சேர்ந்த 'கானா" என்ற கருப்பசாமி பாண்டியன் மட்டும் சும்மா இருப்பாரா?

"கானா" மகன் சங்கர்
அதே திருநெல்வேலி தொகுதிக்கு மாவட்ட செயலர் கருப்பசாமி பாண்டியன் மகன் சங்கரும் விருப்ப மனு கொடுத்திருக்கிறார்.

பொங்கலூர் மருமகன்...
கோயம்புத்தூர் தொகுதிக்கு பொங்கலூர் பழனிச்சாமியின் மகன் பைந்தமிழ்ப் பாரி விருப்ப மனு கொடுத்திருக்கிறார். அதே தொகுதிக்கு பொங்கலூர் பழனிச்சாமி மருமகன் டாக்டர் கோகுலும் விருப்ப மனு கொடுத்திருக்கிறார்.

கண்ணப்பன் மகன்
இதேபோல் பொள்ளாச்சி தொகுதியை கேட்டு விருப்ப மனு கொடுத்துள்ளார் மு. கண்ணப்பன் மகன் மு.க. முத்து.

சுப.த. சம்பத்
இதேபோல் ராமநாதபுரம் தொகுதியை கேட்டு சுப. தங்கவேலன் மகன் சுப.த.சம்பத் விருப்ப மனு கொடுத்திருக்கிறார்.

எ.வ.வே. கம்பன்
திருவண்ணாமலை தொகுதியை எ.வ.வேலு தனது மகன் கம்பனுக்கு வாங்கித் தருவதில் மும்முரம் காட்டிக் கொண்டிருக்கிறார்.
இத்தனை வாரிசுகளுக்கும் திமுக மேலிடம் சீட் கொடுக்குமா? அல்லது கட்சிக்கு உழைத்தவர்களுக்கு கரம் கொடுக்குமா? என்பதுதான் அக்கட்சி தொண்டர்களின் எதிர்பார்ப்பு.












Click it and Unblock the Notifications