கட்டாய விடுமுறை பட்டியலில் பொங்கல் பண்டிகை மீண்டும் சேர்ப்பு.. திமுக அறிவித்த ஆர்ப்பாட்டம் ரத்து!
மத்திய அரசை கண்டித்து இன்று நடைபெறவிருந்த திமுக ஆர்ப்பாட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: கட்டாய விடுமுறை பட்டியலில் பொங்கல் பண்டிகை மீண்டும் சேர்க்கப்பட்டதால் சென்னையில் இன்று நடைபெறவிருந்த திமுக ஆர்ப்பாட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.
பொங்கல் பண்டிகை விடுமுறையை கட்டாய விடுமுறை பட்டியலில் இருந்து மத்திய அரசு ரத்து செய்வதாக செய்திகள் வெளியாகின. இதற்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். இதனிடையே மத்திய அரசை கண்டித்து இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திமுக தலைமைக் கழகம் அறிவித்திருந்தது.
இந்நிலையில் கட்டாய விடுமுறை பட்டியலில் பொங்கல் பண்டிகை மீண்டும் சேர்க்கப்பட்டதால் சென்னையில் இன்று நடைபெறவிருந்த திமுக ஆர்ப்பாட்டம் ரத்து செய்யப்படுவதாக திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.
பொங்கல் திருநாளை விருப்ப விடுமுறையாக அறிவித்ததை மத்திய அரசை திரும்ப பெற்று விட்டதால், திமுக சார்பில் அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை சென்னை வள்ளுவர் கோட்டம் எதிரில் மத்திய அரசை கண்டித்து நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட கண்டன ஆர்ப்பாட்டம் ரத்து செய்யப்படுகிறது என்று தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.