தேர்தல் ஆணையமே க்ரீன் சிக்னல் தந்தாலும் தஞ்சை, அரவக்குறிச்சியில் புதுவேட்பாளர்களை தேடும் திமுக!
சென்னை: தஞ்சாவூர், அரவக்குறிச்சியில் அஞ்சுகம் பூபதி மற்றும் கே.சி. பழனிச்சாமி ஆகியோரை மீண்டும் வேட்பாளர்களாக நிறுத்துவதில்லை என திமுக முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது. இதனால்தான் வேட்பாளர்கள் நேர்காணலை அறிவித்துள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பணப்பட்டுவாடா புகாரில் தஞ்சாவூர், அரவக்குறிச்சி தொகுதிகளுக்கான தேர்தல் நிறுத்தப்பட்டிருந்தது. இத்தொகுதிகளில் நவம்பர் 19-ந் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

பணப்பட்டுவாடா சர்ச்சையில் சிக்கிய தஞ்சாவூர், அரவக்குறிச்சி திமுக, அதிமுக வேட்பாளர்கள் போட்டியிட தடையில்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது. இருப்பினும் திமுக புதிய வேட்பாளர்களை தேர்வு செய்ய நேர்காணலை அறிவித்துள்ளது.
இதனால் தஞ்சாவூர், அரவக்குறிச்சியில் திமுகவின் முந்தைய வேட்பாளர்களான அஞ்சுகம் பூபதி மற்றும் கே.சி. பழனிச்சாமிக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படமாட்டாது என்பது உறுதியாகி உள்ளது. அரவக்குறிச்சி தொகுதியைப் பொறுத்தவரையில் கே.சி. பழனிச்சாமி நிறுத்தப்பட்டால் பணத்தை தண்ணீராக வாரியிறைப்பார் என எதிர்பார்க்கின்றனர் திமுகவினர்.
ஆனால் திமுக தலைமையோ தேர்தல் பிரசாரத்தில் பணம் கொடுப்பதாக மீண்டும் சர்ச்சை வந்துவிடக் கூடாது என கருதுகிறது. இதனால்தான் புதிய வேட்பாளர்களை தேர்வு செய்ய நேர்காணலுக்கு அழைத்திருப்பதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications