முந்தைய திமுக ஆட்சியில் தவறுகள் நடந்தது.. நானும் துணை போயிருக்கலாம்.. இனி நடக்காது: ஸ்டாலின்
சேலம்: கடந்த திமுக ஆட்சியின் போது சிலர் தவறுகளில் ஈடுபட்டனர், அதற்கு நானும் துணை போயிருக்கலாம். ஆனால், அந்தத் தவறுகள் இனி நடக்காது என திமுக பொருளாளர் ஸ்டாலின் உறுதிபட தெரிவித்துள்ளார்.
அடுத்தாண்டு தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதி மக்களையும் நேரில் சந்திக்கும் முயற்சியாக நமக்கு நாமே விடியல் மீட்பு பயணத்தை மேற்கொண்டு வருகிறார் திமுக பொருளாளர் ஸ்டாலின்.

இரண்டு கட்ட பயணங்களை வெற்றிகரமாக முடித்துள்ள ஸ்டாலின் மூன்றாம் கட்ட நமக்கு நாமே விடியல் மீட்பு பயணத்தை நேற்று சேலத்தில் துவக்கினார். சங்ககிரியில் லாரி உரிமையாளர்களைச் சந்தித்து அவர் கலந்துரையாடினார்.
அப்போது, சங்ககிரி லாரி உரிமையாளர் சங்க தலைவர் குமாரசாமி பேசுகையில், ‘சங்ககிரியில், 15 ஆயிரம் லாரிகள் உள்ளன; அனைத்து லாரிகளையும் நிறுத்தும் வகையில், சங்ககிரியில் ஆட்டோ நகர் அமைக்க வேண்டும். ஓட்டுனர் தட்டுப்பாடு அதிகம் உள்ளது. எட்டாவது வரை படித்திருந்தால் தான், 'டிரைவிங் லைசென்ஸ்' என்ற விதியை தளர்த்தி, எழுத படிக்க தெரிந்தால், லைசென்ஸ் வழங்கும் முறையை கொண்டு வர வேண்டும்' என கோரிக்கை விடுத்தார்.
அதனைத் தொடர்ந்து ஸ்டாலின் பேசியதாவது:-
சமீபத்தில், நாமக்கல், கரூர் மாவட்டங்களுக்கு சென்றேன். அங்கேயும், லாரி தொழிலில் உள்ள பிரச்னை பற்றி கூறினர். உங்கள் கருத்துக்களையும் ஏற்று, தேர்தல் அறிக்கையில் அந்த கோரிக்கைகள் இடம்பெறச் செய்வேன்.

திமுக ஆட்சிக்கு வந்ததும் அவற்றை நிறைவேற்றுவோம். இந்த கூட்டத்தில், 'ஊழலற்ற ஆட்சி, நேர்மையான ஆட்சி' வேண்டும் என்றனர். அதன்படி, 'கரப்ஷன், கலெக் ஷன், கமிஷன்' இல்லாத ஆட்சி இருக்கும்.
திமுக ஆட்சியின் போது, சிலர் தவறுகளில் ஈடுபட்டனர்; அதற்கு, நானும் துணை போயிருக்கலாம். அந்த தவறுகள் இனி இருக்காது' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications