ஆவூன்னா 234! ஆதி முதல் அந்தம் வரை டேட்டா கேட்ட நடிகர் விஜய்.. அப்போ அரசியல் பிரவேசம் கன்பார்ம்டு!
சென்னை: நடிகர் விஜய் விரைவில் அரசியலுக்கு வர போகிறார் என்பதை உறுதியாக்கும் வகையில் அவர் ரசிகர் மன்றத்திடம் கேட்ட தகவல்கள் கூறுகின்றன.
நடிகர் விஜய் எப்போது அரசியலுக்கு வர போகிறார் என்ற எதிர்பார்ப்பு அவருடைய ரசிகர்களுக்கு நிறைய இருக்கிறது. தனது திரைப்படங்களில் மக்களுக்கு ஆட்சியாளர்கள் செய்யும் அநீதியை தட்டிக் கேட்பது போன்ற கதை களத்தில் நடித்திருப்பார்.
அது போல் வசனங்களும் தெறிக்கவிடும் அளவுக்கு இருக்கும். ஆனால் அவர் எப்போது அரசியலுக்கு வருவார் என்பதுதான் எதிர்பார்ப்பாகி இருக்கிறது. கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலின் போதே அவர் அரசியலுக்கு வருவார் என ரசிகர்கள் காத்திருந்து ஏமாந்தனர்.

இந்த நிலையில் விஜய் தனது மக்கள் இயக்கத்தினரை சமூக சேவைகளில் தொடர்ந்து ஈடுபடுத்தி வருகிறார். அதாவது தனது பிறந்தநாள், திருமண நாள் அன்று தேவையில்லாமல் கட்அவுட் வைப்பது, பாலாபிஷேகம் செய்வது, பந்தல் கட்டுவது போன்றவற்றை செய்வதை காட்டிலும் ஏழை எளிய மக்களுக்கு உதவுங்கள் என அறிவுறுத்தியுள்ளார்.
அதை வேதமாக எடுத்துக் கொண்ட விஜய் ரசிகர் மன்றத்தினர் ஆண்டுதோறும் மேற்கண்ட நாட்களின் போது மக்கள் நல திட்டங்களை செய்து வருகிறார்கள். அது போல் ரத்தம் தானம் செய்கிறார்கள். கொரோனா காலத்தில் மக்கள் பல இடங்களில் வயிராற சாப்பிட்டதற்கு விஜய் ரசிகர்களும் ஒரு காரணம். அது போல் புயல், மழை வெள்ள நாட்களில் கூட விஜய் மக்கள் இயக்கத்தினர் நலத்திட்டங்களை செய்து வருகிறார்கள்.
அவரவர் தொகுதிக்குள்பட்ட மக்களுக்கு விஜய் ரசிகர்கள் தேடி போய் உதவி செய்வதால் அவர்கள் மக்கள் மத்தியில் பரிட்சயம் ஆகிவிட்டனர். இதன் பலனை உள்ளாட்சி தேர்தலின் போது இவர்கள் கண்டனர். தனது பெயரையும் கொடியையும் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என தெரிவித்திருந்ததை அடுத்து அதிகளவிலான மக்கள் இயக்கத்தினர் மாமன்றத்திற்கு தேர்வாகியுள்ளனர்.
இதையடுத்து கடந்த 14 ஆம் தேதி அம்பேத்கர் பிறந்ததினத்தையொட்டி அனைத்து தொகுதிகளிலும் உள்ள அம்பேத்கர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த சொன்ன நடிகர் விஜய், ஏழை மக்களுக்கு நலத்திட்டங்களையும் செய்ய உத்தரவிட்டிருந்தார். அண்ணனின் உத்தரவை அசராமல் அப்படியே கேட்டனர் இந்த தம்பிகள். அம்பேதகரை முன்னெடுத்து நடிகர் விஜய் அரசியல் செய்ய போகிறாரா என்ற விடைகிடைக்காத கேள்வியும் எழுந்தது.
அது போல் 234 தொகுதிகளிலும் 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு தேர்வுகளில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களுக்கு நடிகர் விஜய் வரும் ஜூன் மாதம் நேரில் பாராட்டு தெரிவிக்கவிருக்கிறாராம். அது போல் உலக பட்டினி தினத்தையொட்டி 234 தொகுதிகளிலும் அன்னதானம் வழங்குமாறு விஜய் உத்தரவிட்டதை அடுத்து நேற்றைய தினம் மக்கள் வயிறார உணவு சாப்பிட்டனர். இப்படி ஆவூன்னா 234.. 234 என விஜய் கூறுகிறாரே அப்படியென்றால் எப்போது அரசியல் கட்சியை தொடங்க போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதற்கு பதில் கொடுக்கும் விதமாக இன்னொரு தகவல் வெளியாகியுள்ளன. அதாவது 234 தொகுதிகளிலும் மக்களுக்கு இருக்கும் பிரச்சினைகள், அங்கு இத்தனை தேர்தல்களில் போட்டியிட்டோர் விவரம், தோல்வி அடைந்தோர் விவரம், யாருக்கு செல்வாக்கு, யார் மீது அதிருப்தி, விஜய் மக்கள் இயக்கத்தினர் மீது மக்களின் எண்ணவோட்டம் உள்ளிட்டவைகள் குறித்து தகவல்களை நடிகர் விஜய் கேட்டுள்ளாராம். அதை விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் அனுப்பி வருகிறார்களாம்.
எனவே விஜய் இந்த தகவல்களை எல்லாம் கேட்டதை வைத்து பார்த்தோமேயானால் அவர் விரைவில் அரசியல் பிரவேசத்தை அறிவிப்பார் என்றும், வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும் தனது இயக்கத்தினரை ஆழம் பார்க்க விஜய் இறக்கிவிடுவார் என்றும் தெரிகிறது. திரைப்படங்களில் நடித்து வரும் விஜய் எந்த மாதிரியான அரசியலை முன்னெடுக்க போகிறார் என்பது தெரியவில்லை. அவர் எதற்காக அரசியலுக்கு வருகிறார் என்பதையும் அவர் விளக்கும் வரை யூகங்கள் 4 கால் பாய்ச்சலில் ஓடி கொண்டுதான் இருக்கும்.












Click it and Unblock the Notifications