எடப்பாடி பழனிச்சாமியை முந்தினார் ஓபிஎஸ்... எதில் தெரியுமா?
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை,ஓபிஎஸ் ஓவர் டேக் செய்து ஓரங்கட்டிவிட்ட விஷயம் அதிமுகவில் காட்டுத் தீ போல பரவிவருகிறது.
சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை ஓவர் டேக் செய்து,அமைச்சர்கள் மற்றும் அதிமுகவினர் மத்தியில் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளார் ஓபிஎஸ்.
ராமானுஜர் 1000 வது ஆண்டு அவதார விழாவில் இப்படி சறுக்கிட்டாரே சிஎம் என்று பேசிப்பேசி ஓய்ந்து போகிறார்கள் தலைமைச் செயலக வட்டாரத்தில்.
ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஆதிகேசவ பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி கோவிலில், ஸ்ரீராமானுஜரின் 1000-வது ஆண்டு அவதார உற்சவம் கடந்த ஏப்ரல் மாதம் 21-ம் தேதி தொடங்கி, இம்மாதம் 1-ம் தேதி வரை வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த விழாவில் தமிழகம் மட்டும் அல்லாமல் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள், ஜீயர்கள் என லட்சக்கணக்கில் கலந்துகொண்டனர்.
விழாவின் ஒருபகுதியாக கடந்த 2ம் தேதி ஸ்ரீபெரும்புதூரில்,'ராமானுஜரின் தமிழ்த் தொண்டு'என்ற பெயரில் புத்தகம் ஒன்றை வெளியிட்டு ஜீயர்களின் மனதில் இடம்பிடித்துள்ளார் ஓபிஎஸ். இதை மிக லேட்டாக கவனித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, 'வைணவ பெரியவர்களின் சமூக சேவையை நாம் எப்படி மறந்தோம், தமிழக அரசு சார்பில் கொண்டாடியிருக்க வேண்டாமா' என்று அதிகாரிகள் மற்றும் அறநிலையத்துறை அமைச்சரிடம்'கொந்தளித்துள்ளார்.
இதனையடுத்து நேற்று,தலைமைச் செயலகத்தில், ஸ்ரீராமானுஜரின் 1000வது திருஅவதார விழாவின் தொடர்ச்சியாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஸ்ரீ ராமானுஜரின் வாழ்க்கை வரலாற்றை வண்ணப் படங்களுடன் ஆங்கிலம், தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் விளக்கும்" ஸ்ரீ ராமானுஜர் வைணவ மாநிதி'' என்ற புத்தகத்தை வெளியிட இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் பெற்றுக் கொண்டார்.
வைணவ வழிபாட்டாளர்கள் ஆதரவை பெறுவதில் ஓபிஎஸ் முந்திக்கொண்டார் என்பதை ஆச்சரியமாக பார்க்கிறது எடப்பாடி அன்ட் கோ. இதில் ஜெயலலிதாவின் வழியில் செல்கிறார் ஓபிஎஸ் என்று பெருமிதம்கொள்கிறார்கள் ஓபிஎஸ் அணியினர்.