‘கக்கூஸ்‘ திவ்யா கைது.. சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு
சென்னை: எட்டு ஆண்டுகளுக்கு முன் போராட்டம் ஒன்றில் பங்கேற்றதற்காக இன்று ஆவணப்பட இயக்குநர் திவ்யபாரதி கைது செய்யப்பட்டார். இதற்கு கடும் கண்டனங்கள் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளத்தில் ஏற்பட்டுள்ளது.
2009ம் ஆண்டு, சக மாணவர் ஒருவரின் மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கூறி திவ்யபாரதி, சடலத்தை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டார்.
அந்த வழக்கில் நீண்ட நாட்கள் ஆஜராகாமல் இருந்த திவ்யபாரதி இன்று மதுரையில் கைது செய்யப்பட்டார். அதனைக் கண்டித்து பேஸ்புக்கில் வெளியாகியுள்ள சில பதிவுகள்..
மக்களின் அன்பை பெற்ற திவ்யா குற்றவாளியா?
"நேற்று தான் அவருக்கு பெரியார் சாக்ரடீஸ் விருது அறிவிக்கப்பட்டிருந்தது.
வாழ்த்துச் சொல்லி முடிவதற்குள் வருத்தம் தெரிவிக்க வைக்கிறது அரசு. மக்களின், அமைப்புகளின் அன்பை, அங்கீகாரத்தைப் பெறுகிற எவரும் குற்றவாளிகளாக்கப் படுகிறார்கள் இந்த மக்கள் விரோத அரசுகளின் ஆட்சியில்.
வேடனால் சிறைவைக்கப்பட்ட புறாக்கள் பின் ஒன்று சேர்ந்து வலையோடு பறந்து விடுதலை பெற்ற கதை போல வேடர்களால் சூழப்பட்டிருக்கும் இத்தருணத்தில் ஒருவர் கை ஒருவர் பிடித்தவாறே குரலெழுப்பி உயரப்பறக்க வேண்டும் விடுதலை நோக்கி!" என்று சுசீலா ஆனந்த் தனது பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இன்னும் கைது பண்ணலயேன்னு…
"கக்கூஸ் ஆவணப்பட இயக்குனர் திவ்யா கைது செய்யப்பட்டுள்ளார்.
அதானே என்னடா அரசுக்கு எதிரே பேசுரங்களே இன்னும் கைது பண்ணலேயேனு பாத்த" என்று கிரி கிருஷ்ணா கண்டனம் தெரிவித்துள்ளார்.
சுதந்திர போராட்டத்தில் பங்கேற்றதற்காக இப்போது கைது
"கக்கூஸ் ஆவணப்பட இயக்குனர் திவ்யா பாரதி 2009ல் மாணவர் போராட்டத்தில் ஈடுபட்டதாக கைது
.
விட்டா ........1946 இல் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டதற்காக கைது செஞ்சாலும் செய்வாயிங்க" என அன்சார் கிண்டலடித்துள்ளார்.
அரசுக்கு எதிராக யாரும் போராடக் கூடாது
"வளர்மதிக்கு அடுத்த விக்கெட், கக்கூஸ் என்கிற ஆவண படத்தை எடுத்த தோழர் திவ்யா கைது..
அரசாங்கத்திற்கு எதிரா எவனும் போராட கூடாது...சர்வதிகார ஆட்சி.." என்று தமிழ் கடுமையான கோபத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.