7 தமிழர் விடுதலைக்கு மத்திய அரசின் கருத்துதான் தேவை- ஒப்புதல் தேவையில்லை- சட்ட வல்லுநர்கள் கருத்து
சென்னை: ராஜிவ் கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் 7 தமிழரை விடுதலை செய்யும் விவகாரத்தில் மத்திய அரசின் கருத்துதான் தேவையே தவிர அதன் ஒப்புதல் அவசியம் இல்லாதது என்று சட்ட வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரது தூக்கை ரத்து செய்த உச்சநீதிமன்றம், 23 ஆண்டுகாலம் அவர்கள் சிறையில் இருந்ததால் விடுதலை செய்வது குறித்து மாநில அரசு முடிவு செய்யலாம் என்று தீர்ப்பளித்தது.
இதைத் தொடர்ந்து தமிழக அமைச்சரவை இந்த மூவரை மட்டுமின்றி ராஜிவ் வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் நளினி உள்ளிட்ட 4 பேரையும் விடுதலை செய்ய முடிவு செய்தது. இம்முடிவு சட்டசபையில் அறிவிக்கப்பட்டது.
சட்டம் சொல்வது என்ன?- ஜெ.
அப்போது பேசிய தமிழக முதல்வர் ஜெயலலிதா, குற்ற விசாரணை முறைச் சட்டம் 435-ன்படி, தமிழ்நாடு அமைச்சரவையின் முடிவு குறித்து மத்திய அரசுடன் கலந்தாலோசிக்கப்பட வேண்டும். எனவே, மத்திய அரசின் "கருத்தினைப்" பெறும் வகையில், திருவாளர்கள் சுதேந்திரராஜா என்கிற சாந்தன், ஸ்ரீஹரன் என்கிற முருகன், பேரறிவாளன் என்கிற அறிவு, திருமதி நளினி, ராபர்ட் பயஸ், ஜெயகுமார் மற்றும் ரவிச்சந்திரன் ஆகிய ஏழு பேரையும் விடுதலை செய்யலாம் என்ற தமிழ்நாடு அமைச்சரவையின் முடிவு மத்திய அரசுக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்படும் என்று கூறினார்.
மத்திய அரசிடம் "கருத்து" கேட்பு
மேலும் மத்திய அரசு 3 நாட்களுக்குள் கருத்து தெரிவிக்காவிட்டால் தமிழக அரசே தமக்குள்ள அதிகாரத்தின்படி 7 பேரையும் விடுதலை செய்யும் என்றும் ஜெயலலிதா கூறியிருந்தார். இதனைத் தொடர்ந்து இந்த விவகாரத்தில் மத்திய அரசு "ஒப்புதல்" அளிக்க வேண்டும் என்று தமிழக அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.
"consult" தான் consent அல்ல
ஆனால் இந்த விவகாரத்தில் மத்திய அரசிடம் ஆலோசித்து கருத்து பெறலாம் (consult) என்பதுதானே தவிர மத்திய அரசின் 'ஒப்புதல்" (consent) தேவையில்லை என்று சுட்டிக்காட்டுகிறார் ராஜிவ் வழக்கில் ஆஜராகி வாதாடிய மூத்த வழக்கறிஞர் எஸ். துரைசாமி.
நீதிபதி சந்துரு கருத்து
இதே கருத்தை ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சந்துருவும் முன்வைத்துள்ளார். "குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 432 மற்றும் 433 ஆகியவை கைதி ஒருவருக்குத் தண்டனைக் குறைப்பு செய்து முன்னரே விடுவிக்க மாநில அரசுக்கு அதிகாரம் அளிக்கிறது. பிரிவு 435 இன் படி ஒருசில குற்றங்களில் தண்டனை பெற்றோருக்கு தண்டனைக் குறைப்பு செய்யும்போது மத்திய அரசோடு கலந்துபேசி செய்யவேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது" என்று சுட்டிக் காட்டுகிறார் நீதிபதி சந்துரு.
ஒப்புதல் அவசியமற்றது
பொதுவாக "consultation" என்று குறிப்பிட்டு வழங்கப்படும் தீர்ப்புகளில் ஒப்புதல் என்பது அவசியமற்றது என்றே உச்சநீதிமன்றம் பல தீர்ப்புகளில் விளக்கம் கொடுத்திருக்கிறது என்பதையும் சட்ட வல்லுநர்கள் சுட்டுக்காட்டுகின்றனர்.
தமிழக அரசு விடுவிக்கலாம்
7 தமிழர் விடுதலையில் மத்திய அரசின் கருத்து எதுவாக இருந்தாலும் தமிழக அரசுக்குரிய அதிகாரத்தின் அடிப்படையில் விடுதலை நடவடிக்கை மேற்கொள்ளலாம் என்பதே ஒட்டுமொத்த சட்ட வல்லுநர்களின் கருத்தாக இருக்கிறது.