மேட்டூர் நகராட்சி ஆணையாளரை பார்த்து குரைத்த நாய்.. அடித்துக் கொன்ற ஊழியர்கள் !
மேட்டூரில் நகராட்சி ஊழியர்கள் நாயை அடித்து கொன்று தெருவில் இழுத்து சென்ற சம்பவத்திற்கு விலங்கு ஆர்வலர்கள் எதிர்ப்புத் தெரிவி்த்துள்ளனர்.
சேலம்: மேட்டூரில் தன்னை பார்த்து குரைத்த நாயை நகராட்சி ஊழியர்களை வைத்து அடித்துக்கொன்ற நகராட்சி ஆணையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விலங்கு ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேட்டூர் நகராட்சி ஆணையாளராக இருப்பவர் நாராயணன் (54). இவருக்கு நகராட்சியின் சார்பில் ஒதுக்கப்பட்டுள்ள வீடு மேட்டூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தின் அருகில் உள்ளது. இவருடைய வீட்டுக்கு எதிரில், பூலாம்பட்டி காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றும் ராஜமாணிக்கம் என்பவரின் வீடு உள்ளது. அவர் வீட்டில் செல்லமாக நாய் ஒன்றை வளர்த்து வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் ஆணையாளர் நாராயணன் தன்னுடைய வீட்டுக்கு வெளியில் உள்ள சாலையில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்த போது, அந்த நாய் இவரை பார்த்து அடிக்கடி குரைத்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த நாராயணன் மேட்டூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் நாயை பிடித்துச் சென்ற நகராட்சி ஊழியர்கள், நாயை அடித்து கொன்று தெருவில் இழுத்து சென்றனர்.
இச்சம்பவத்தை பார்த்த அங்கிருந்த இளைஞர்கள் சிலர் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்தனர். இந்த வீடியோ தற்போது வைரலாகியுள்ளது. இதைப்பார்த்த பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் நகராட்சி ஆணையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விலங்குகள் நலஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications