ராமநாராயணன் படம் மாதிரி கட்டுவிரியன் பாம்பிடம் இருந்து மனிதரை காப்பாற்றிய நாய்
ராமநாராயணன் படத்தில் வருவது போல் பாம்பிடம் இருந்து மனிதரை நாய் காப்பாற்றிய சம்பவம் ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது.
சென்னிமலை: திரைப்படத்தில் வருவது போல் நிஜவாழ்க்கையிலும் தன்னை வளர்த்த எஜமானரை பாம்பிடம் இருந்து டாபர்மேன் நாய் ஒன்று காப்பாற்றியுள்ளது. இந்த சம்பவத்தை அந்தப் பகுதி மக்கள் அனைவரும் ஆச்சர்யத்துடன் பேசி வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே உள்ள முத்தையன்கோவில் பகுதியை சேர்ந்தவர் 44 வயதான மணி என்கிற தங்கவேல். இவர் ஒரு விவசாயி. இவர் மணல் லாரியும் வைத்துள்ளார். மணல் லாரியை வைப்பதற்கான அலுவலகம் இவரது வீட்டில் இருந்து சற்று தொலைவில் உள்ளது. அங்கிருந்து வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்வது வழக்கம்.
இவர் வீட்டில் ஜானி என்ற நாயை வளர்த்து வருகிறார். டாபர்மேன் இனத்தை சேர்ந்த இந்த நாய் தங்கவேலுடன் விசுவாசமாக பழகி வந்தது. அவரும் அதனை மிகவும் பாசத்துடன் வளர்த்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த சனிக்கிழமை தனது மணல் லாரி அலுவலகத்தில் இருந்து வீட்டிற்கு வந்துள்ளார் தங்கவேல். அவரைக் கண்ட நாய் ஜானி படுவேகமாக அவர் அருகில் ஓடிச் சென்றது. பின் வழக்கத்துக்கு மாறாக பயங்கரமாக குரைக்க ஆரம்பித்தது. ஏன் நாய் இப்படி திடீரென்று குரைக்கிறது என்று தங்கவேல் யோசித்துக் கொண்டே இருந்தார். மேலும், நாய் சாப்பிட எதுவும் வாங்கி வரவில்லை என்று நினைத்து நாயை தங்கவேல் சமாதானப்படுத்தத் தொடங்கினார்.
ஆனால் நாய் ஜானி, குரைப்பதை நிறுத்தவில்லை. மாறாக தங்கவேலின் மோட்டார் வாகனத்தை சுற்றி சுற்றி வந்து குரைத்தது. அப்போது, ஏன் நாய் வித்தியாசமாக நடந்து கொள்கிறது என்பதை யோசித்தவாறே இருசக்கர வாகனத்தின் பின்பக்கம் பார்த்திருக்கிறார் தங்கவேல். அப்போது, வாகனத்தின் பின்பக்க இருக்கையில் கொடிய விஷப்பாம்பான கட்டுவிரியன் இருந்துள்ளது.
அதைப் பார்த்ததும் பதறி அடித்து ஓடினார் தங்கவேல். பாம்பு இருக்கையில் இருந்து கீழே விழுந்து வேகமாக ஊர்ந்து ஓடத் தொடங்கியது. இதனை உஷாராகப் பார்த்துக் கொண்டே இருந்த நாய் ஜானி பாம்பை துரத்தி சென்று பிடித்து, கடித்து குதறி சாகடித்தது.
தான் வளர்த்த நாய் எப்படி சாதுர்யமாக தனது உயிரை பாம்பிடம் இருந்து காப்பாற்றியுள்ளது என்பதை நினைத்து தங்கவேல் பெரும் மகிழ்ச்சியடைந்தார். இதனையறிந்த அக்கம்பக்கத்தினரும் வியந்து நாயை பாராட்டி வருகின்றனர்.