நாயை மாடியில் இருந்து தூக்கி வீசிய மருத்துவ மாணவர்கள் சஸ்பெண்ட் - கல்லூரி நிர்வாகம் அதிரடி
சென்னை: சென்னை அருகே இரு மருத்துவ மாணவர்கள், நாய் ஒன்றை மாடியிலிருந்து தூக்கி வீசிய செயல் பலரையும் கொந்தளிக்க வைத்துள்ளது. இதையடுத்து நாயை தூக்கி வீசிய மருத்துவக் கல்லூரி மாணவர்கள் அந்த கல்லுரியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
நாகர்கோவிலைச் சேர்ந்தவர் கவுதம் சுதர்சன். இதேபோல நெல்லையைச் சேர்ந்துவர் ஆஷிஷ் பால். இவர்கள் இருவரும் கீழ்க்கட்டளை பகுதியில் தங்கியிருந்து தனியார் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் படித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இவர்கள் ஒரு நாயை 4வது மாடியிலிருந்து தூக்கி வீசி அதை வீடியோவிலும் படமாக்கியுள்ளனர். இந்த வீடியோ சமூக வலைத் தளங்களான ‘பேஸ்புக்‘, ‘வாட்ஸ் அப்'களில் கடந்த சில நாட்களாக உலாவியது. இந்த வீடியோவை பார்த்த விலங்குகள் நல ஆர்வலர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து விலங்குகள் நல வாரியத்தில் பணியாற்றும் ஆண்டனி கிளமென்ட் குன்றத்தூர் போலீசில் புகார் செய்தார்.
இதையடுத்து நாயை தூக்கி வீசிய இருவரையும் அவர்களது பெற்றோரே கொண்டு வந்து போலீசில் ஒப்படைத்து விட்டனர். இருவரையும் கைது செய்த போலீஸார் ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். ஆனால் இருவருக்கும் உடனடியாக ஜாமீனும் தரப்பட்டு விட்டது.
இவ்விருவர் மீதும் கல்லூரி நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விலங்குகள் நல ஆர்வலர்கள் தொடர்ந்து குரல் எழுப்பி வந்தனர். இந்நிலையில் அவர்கள் இருவரையும் மருத்துவ கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications