உடன்பிறந்த சகோதரிக்கு இந்த நிலையா... ஆதங்கத்தில் திவாகரன் கூறியதை அரசியலாக்காதீர்... தினகரன்
உடன்பிறந்த சகோதரி சசிகலாவுக்கு இந்த நிலை ஏற்பட்டதால் திவாகரன் ஆதங்கத்தில் கூறியதை பெரிதுப்படுத்தீர். அதை ஏன் அரசியலாக்குகிறீர்கள் என்று டிடிவி தினகரன் கேட்டார்.
தஞ்சை: உடன்பிறந்த சகோதரி சசிகலாவுக்கு ஏற்பட்ட நிலையை கண்டு திவாகரன் ஆதங்கத்தில் கூறியதை எல்லாம் ஏன் அரசியல் ஆக்குகிறீர்கள் என்று தினகரன் தஞ்சையில் கேள்வி எழுப்பினார்.
மன்னார்குடியில் சசிகலாவின் சகோதரர் திவாகரன் செய்தியாளர்களிடம் நேற்று பேசினார். அப்போது சசிகலாவை ஜெயலலிதா முழுமையாக பயன்படுத்திக்கொண்டு நிராயுதபாணியாக விட்டுச் சென்றுவிட்டார். 33 ஆண்டுகள் ஜெயலலிதாவுடன் இருந்த எனது அக்காவை தன்னந்தனியே தவிக்க விட்டு சென்றுவிட்டார்.
சசிகலாவுக்கு எந்தப் பாதுகாப்பும் செய்யாமல் ஜெயலலிதா விட்டு சென்றுவிட்டார். சசிகலாவின் நிலைமை வேறு எந்தப் பெண்ணுக்கும் வரக்கூடாது. இது மற்ற பெண்களுக்கு ஒரு பாடம் என்று அவர் கூறியிருந்தார்.

ஜெ.மீது குற்றச்சாட்டு
ஒரு தனியார் தொலைகாட்சி சேனலுக்கு பேட்டி அளித்த தினகரன் கூறுகையில் சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாதான் முதன்மை குற்றவாளி என்றும் மற்றவர்கள் அவருடன் இருந்தவர்கள்தான் என்றும் கூறியிருந்தார். அதேபோல் திவாகரனும் ஜெயலலிதா சசிகலாவை முழுமையாக பயன்படுத்திவிட்டு நிராயுதபாணியாக விட்டு சென்று விட்டார் என்று கூறியிருந்தார். இருவரும் ஜெயலலிதாவையே குற்றவாளி என கூறியிருப்பது தற்போது விவாதத்தை கிளப்பியுள்ளது.

செய்தியாளர்கள் கேள்விக்கு பதில்
தஞ்சையில் செய்தியாளர்களை தினகரன் சந்தித்தார். அப்போது திவாகரன் கருத்து குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த தினகரன், திவாகரனின் சொந்த சகோதரி சசிகலா. அவரை நிர்கதியாக விட்டு சென்றுவிட்டாரே ஜெயலலிதா என்ற ஆதங்கத்தில் பேசியுள்ளார். அதையெல்லாம் ஏன் அரசியலாக்குகிறீர்கள். நமது வீட்டிலும் கூட குழந்தைகளை விட்டுவிட்டு தகப்பனார் மரணமடைந்துவிட்டால் என்ன சொல்வோம். எங்களை இப்படி தவிக்கவிட்டு சென்றுவிட்டீர்களே என்றுதானே. இதனால் இறந்த தகப்பனாரை தாக்கி பேசுவது என்ற அர்த்தமாகிவிடுமா.

இவருக்கு எப்படி தெரியும்
எங்களுக்கு எல்லாமுமாக இருந்தவர் ஜெயலலிதா. அவருடன் சசிகலா 33 ஆண்டுகள் கூடவே இருந்தார்கள். சகோதரியின் நிலை குறித்து சகோதரன் என்ற முறையில் தனது ஆதங்கத்தை செய்தியாளர்கள் கேட்டபோது சொல்லியிருப்பார். எல்லா இடங்களிலும் லேப்டாப் , பென் டிரைவ்கள் உண்டு. அதை பறிமுதல் செய்ததை குருமூர்த்தி பெரிய விஷயமாக பேசுகிறார். அந்த பென் டிரைவில் ஆதாரம் சிக்கியது என்று இவருக்கு எப்படி தெரியும்.

மெய்காப்பாளர்கள்
அதிமுகவை அழிக்க வேண்டும் என்பதற்காக ஒரு ஆண்டாக நடைபெறும் ஒரு முயற்சியின் உச்ச கட்ட நடவடிக்கையாகும். இவையெல்லாம் மக்களுக்கும், இயக்கத் தொண்டர்களுக்கும் தெரியும். சிலர் செய்த தவறுகள் என்று முதல்வர் எதையோ பிதற்றுகிறார். முதல்வர் பதவிக்கே தகுதியில்லாதவர் அவர். கடந்த 1987-களில் நானும் சசிகலாவும்தான் ஜெயலலிதாவுக்கு மெய்காப்பாளர்களாக இருந்தோம்.

ஓட்டு கேட்டவர்
மகன் ஸ்தானத்தில் இருந்து ஜெயலலிதாவை பாதுகாத்தவர்களில் நானும் ஒருவர். நான் 1999-இல் நாடாளுமன்ற உறுப்பினராக ஜெயலலிதாவால் போட்டியிடப்பட்டு வெற்றி பெற்றேன். 10 ஆண்டுகளாக தினகரன் எங்கே போனார் என்று முதல்வர் கேட்கிறாரே, பெரிய கட்சியில் சீட் கிடைக்காவிட்டால் ஒதுக்கப்பட்டவர்கள் என்றாகிவிடுமா. தாங்களும் தங்கள் குடும்ப உறுப்பினர்களும் எந்த ஒரு வழக்கிலும் சிக்கக் கூடாது என்பதற்காக சிலர் செய்த சதியால்தான் நாங்கள் எல்லாம் கட்சியிலிருந்து விலகப்பட்டோம்.

இளங்கோவன் கட்சி மாற முன்னோட்டம்
தொப்பியை போட்டுக் கொண்டு எனக்காக ஆர்.கே. நகரில் ஓட்டு கேட்டவர் முதல்வர் எடப்பாடி. வடக்கே இருந்து யார் வந்தாலும் அவர்களது காலை பிடித்து கொள்ள தயாராக உள்ளனர். ஈவிகேஎஸ் இளங்கோவன் காங்கிரஸ் கட்சியை விட்டு வேறு கட்சியில் சேருவதற்கு முன்னோட்டம் பார்க்கிறார் என்று எனக்கு தகவல் வந்தது என்று தினகரன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications