கட்டுச்சோறு கட்டிக் கொண்டு கலாமின் வீடு, சமாதிக்கு படையெடுக்கும் மக்கள்
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் உள்ள முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் வீட்டிற்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் வருகிறார்கள்.
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் உறவினர்கள் அழைத்ததின்பேரில் எங்கள் ஒன்இந்தியா செய்தியாளர் ஒருவர் ராமேஸ்வரம் சென்றிருந்தார். அவர் ராமேஸ்வரத்தில் உள்ள அப்துல் கலாமின் வீட்டிற்கு சென்றிருந்தார்.
கலாம் வீட்டிற்கு செல்லும் வழி அடங்கிய பலகையை ராமேஸ்வரத்தின் பல தெருக்களில் தற்போது காண முடிகிறது. ராமநாதசுவாமி கோவிலை அடுத்தபடியாக கலாமின் வீட்டிற்கு தான் தினமும் ஏராளமானோர் வந்து செல்கிறார்கள்.
கேலரி
கலாம் வீட்டின் முதல் தளத்தில் அவரது வாழ்க்கை வரலாற்றை எடுத்துக் கூறும் கேலரி உள்ளது. 2011ம் ஆண்டு ஜூன் மாதம் துவங்கப்பட்ட அந்த கேலரிக்கு தற்போது தினமும் ஆயிரக்கணக்கானோர் வருகிறார்கள்.
பார்வையாளர்கள்
மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் பணியாற்றி ஓய்வு பெற்ற கண்ணாயிரம் பிள்ளை(72) என்பவர் கேலரியின் பாதுகாவலராக உள்ளார். கலாமின் வீட்டை சுற்றிப் பார்க்க கட்டணம் எதுவும் வசூலிக்கப்படுவது இல்லை. கேலரிக்கு வரும் மக்கள் அங்கு உள்ள பொருட்களை சேதப்படுத்தாமல் பார்த்துக் கொள்வது கண்ணாயிரம் பிள்ளையின் வேலை.
பேரன்கள்
கேலரிக்கு வரும் கூட்டத்தை அப்துல் கலாமின் பேரன்களும் கட்டுப்படுத்துகிறார்கள். கேலரி காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும். அந்த கேலரிக்கு தினமும் 25 ஆயிரம் பேர் வருகிறார்கள். கேலரிக்கு நுழைவுக் கட்டணம் கிடையாது. கேலரியை கண்டு ரசிக்க இவ்வளவு மக்கள் வருவதை பார்த்து மகிழ்ச்சியாக உள்ளது என கலாமின் பேரன் ஏ.பி.ஜே.எம்.ஜே. ஷேக் சலீம் தெரிவித்தார்.
மறைவு
கலாம் இறந்த பிறகு கேலரிக்கு வரும் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நள்ளிரவில் கூட மக்கள் கலாமின் வீட்டிற்கு முன்பு நின்று புகைப்படம் எடுத்துக் கொள்கின்றனர். வீட்டிற்கு வெளியே அமைதியான முறையில் புகைப்படம் எடுப்பவர்களை நாங்கள் எதுவும் கூறுவது இல்லை என்று கலாமின் மற்றொரு பேரனான ஷேக் தாவூத் தெரிவித்தார்.
புகைப்படங்கள்
கேலரியில் கலாமின் அரிய புகைப்படங்கள், அவர் வாங்கிய பாரத ரத்னா உள்ளிட்ட விருதுகள், குடியரசுத் தலைவராக இருக்கையில் சுகோய் விமானத்தில் பயணம் செய்யும்போது அணிந்திருந்த ஜி-சூட், திப்பு சுல்தான் ராக்கெட்டின் மாதிரி உள்ளிட்டவை உள்ளன. பார்வையாளர்களுக்கு கலாமின் குழந்தைப்பருவ புகைப்படங்களும், பாரத ரத்னா விருதும் பிடித்துள்ளது. சில சமயம் கூட்டத்தை கட்டுப்படுத்துவது கடினம் என கலாமின் பேரனும், கேலரி மேனேஜருமான முகமது அவுல் மீரா தெரிவித்தார்.
கடை
கேலரிக்கு மேல் தளத்தில் கலாம் ஆர்கேட் அமைந்துள்ளது. கலாம் குடும்பத்திற்கு சொந்தமான அந்த கடையில் கைவினைப்பொருட்கள், சங்கு, முத்துகள், பொம்மைகள் விற்பனை செய்யப்படுகின்றது. கலாமின் வீட்டில் சூரிய சக்தியில் இருந்து பெறப்படும் மின்சாரத்தை பயன்படுத்துகிறார்கள். கலாம் ஆர்கேடில் இருந்து கிடைக்கும் பணத்தை வைத்து தான் வீட்டை பராமரிப்பதுடன், அங்கு வேலை செய்பவர்களுக்கு ஊதியம் வழங்கப்படுகிறது.
சமாதி
கலாமின் வீட்டைப் போன்றே அவரின் சமாதிக்கும் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் செல்கிறார்கள். கலாமின் சமாதியில் அவர்கள் மரியாதை செய்கிறார்கள்.