ஜோசப் விஜய்க்கு வாழ்த்துகள்.. பதவி ஏற்றதும் பிரதமர் மோடி கொடுத்த நம்பிக்கை.. பூரித்துபோன ராகுல்
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தமிழகத்தின் முதல்வராக இன்று பதவியேற்று கொண்டார். இந்த பதவி ஏற்பு விழா முடிவடைந்த பிறகு லோக்சபா எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி, சென்னையில் உள்ள கட்சி அலுவலகத்துக்கு சென்றார். அங்கு மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜருக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். மேலும் விஜய் முதல்வராக பதவியேற்றது பற்றி ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் முக்கிய பதிவை செய்தார்.
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக மாறியது. இதையடுத்து கடந்த 5 நாட்களாக போராடி பிற கட்சிகளின் ஆதரவை பெற்று மெஜாரிட்டிக்கான 118 எம்எல்ஏக்களின் ஆதரவை பெற்றார். விஜய்க்கு தற்போது 120 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளது.

இதையடுத்து ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை சந்தித்து நேற்று ஆட்சியமைக்க உரிமை கோரினார்.
ஆளுநர் அனுமதி வழங்கியதை தொடர்ந்து இன்று காலை 10 மணிக்கு சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் விஜய் முதல்வராக பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பதவி பிரமாணம், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். விஜய் உடன் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, அருண் ராஜ், செங்கோட்டையன், வெங்கட்ரமணன், நிர்மல் குமார், காரைக்குடி பிரபு ராஜ்மோகன் உள்பட 9 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.
இந்த விழாவில் விஜய்க்கு ஆதரவு வழங்கிய கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன், காங்கிரஸ் மாஜி தலைவர் ராகுல் காந்தி பங்கேற்றனர். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பங்கேற்கவில்லை. அதற்கு பதில் அவரது 2 எம்எல்ஏக்கள் பங்கேற்றனர்.
விழாவில் பங்கேற்ற ராகுல் காந்தி, விஜய்க்கு நேரில் வாழ்த்து தெரிவித்தார். மேடையில் இருவரும் அருகருகே அமர்ந்து பேசி கொண்டிருந்தனர். அதன்பிறகு விழா முடித்து ராகுல் காந்தி அங்கிருந்து புறப்பட்டு சென்றார். சென்னையில் உள்ள காங்கிரஸ் அலுவலகம் சென்று காமராஜருக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
மேலும் இந்த பதவியேற்பு விழா பற்றி ராகுல் காந்தி கூறுகையில், ''தமிழ்நாடு தேர்ந்தெடுத்துவிட்டது. ஒரு புதிய தலைமுறை. புதிய வாய்ஸ் மற்றும் புதிய கற்பனைக்கு தமிழ்நாடு தயாராகிவிட்டது. விஜய்க்கு நல்வாழ்த்துகள். தமிழ்நாட்டின் க்களின் நம்பிக்கையை நிறைவேற்றுவார் என்று நம்புகிறேன்'' என்றார்.
இதுதொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில், ''தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்றுள்ள ஜோசப் விஜய்க்கு வாழ்த்துகள். எதிர்வரும் பதவிக்காலம் அவருக்கு சிறப்பாக இருக்க வாழ்த்துகள். மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் வகையில் மத்திய அரசு தமிழ்நாடு அரசுடன் இணைந்து பணியாற்றும்'' என்று கூறியுள்ளார்.
முன்னதாக முதல்வராக இருந்த ஸ்டாலின் மத்திய அரசை கடுமையாக விமர்சனம் செய்து வந்தார். மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்வது என்று குற்றம்சாட்டினார். இதுதொடர்பாக மத்திய அரசு, மாநில அரசு இடையே வார்த்தை போர் நீடித்து வந்தது. இந்நிலையில் தான் பிரதமர் மோடி இணைநது பணியாற்றுவோம் என்று முதல்வர் ஜோசப் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications