சென்ட்ரல் ரயில் நிலையத்தைச் சுத்தம் செய்த எம்ஜிஆர் மருத்துவக் கல்லூரி மாணவர்கள்!
சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை பயணிகளுக்கு இடையூறு இல்லாமல் நேற்று சுத்தம் செய்தனர் டாக்டர் எம்ஜிஆர் மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவன பல்கலைக்கழக மாணவர்கள்.
பிரதமர் நரேந்திர மோடி தூய்மை இந்தியா திட்டத்தை அறிவித்த பிறகு பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் இதில் பங்கேற்று வருகின்றனர். நிறுவன ரீதியாகவும் இந்த தூய்மைப் பணியில் ஈடுபாடு காட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், சென்னை மதுரவாயலில் உள்ள டாக்டர் எம்ஜிஆர் மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவன பல்கலைக் கழகத்தின் மாணவர்கள், ஆசிரியர்கள், நிர்வாகிகள் உள்ளிட்டோர் இந்தத் திட்டத்தில் தங்களை இணைத்துக் கொண்டு, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தைச் சுத்தம் செய்தனர்.
பயணிகள் நடமாட்டத்துக்கு இடையூறு இல்லாத வகையில் இந்தப் பணி நடைபெற தெற்கு ரயில்வே அனுமதி அளித்திருந்தது.
இந்த நிகழ்ச்சியை தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் தொடங்கி வைத்தார். புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏசி சண்முகம் முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில் பல்கலைக் கழகத்தின் வேந்தர் ஏசி சண்முகம், பல்கலைக்கழகத்தின் தலைவர் ஏசிஎஸ் அருண்குமார், செயலாளர் ரவிக்குமார், பல்கலைக் கழக நிர்வாகிகள், பேராசிரியர்கள், மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.