ஈரோடு அருகே திக்.. திக்.. மணித்துளிகள்! அந்தரத்தில் வீசப்பட்ட ஆண்! குடிகாரனை கும்மிய மக்கள்!
விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற கார் ஓட்டுநருக்கு பொதுமக்கள் தர்மஅடி கொடுத்தனர்.
மேட்டூர்: விபத்தையும் ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற கார் ஓட்டுனரை பொதுமக்கள் விரட்டி பிடித்து தர்ம அடி கொடுத்த சம்பவம் மேட்டூரில் நிகழ்ந்துள்ளது.
இடம்: மேட்டூர் நால்ரோடு.
நேரம்: நேற்று மாலை 7 மணி.
நெடுஞ்சாலையின் டீ கடை ஒன்றில் நமது ஒன் இந்தியா நிருபர் டீ குடித்து கொண்டிருக்கிறார்.
அப்போது படுவேகமாக கார் ஒன்று ஈரோடு மாவட்டத்தை நோக்கி செல்ல வந்துகொண்டிருக்கிறது. அதிவேகமாக வந்த காரை சாலையில் சென்றுகொண்டிருந்த பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மற்றும் நம் ஒன் இந்தியா நிருபர் உட்பட அதிர்ச்சியுடன் பார்க்கின்றனர். நெடுஞ்சாலை என்பதால் ஏராளமான வாகனங்கள் சாலைகளில் சென்று கொண்டிருக்கின்றன. மேலும் சாலைகளின் இருபுறங்களிலும் வாகனங்களும் நிறுத்தப்பட்டிருக்கின்றன.
இந்நிலையில், வேகமாக வந்த அந்த காரானது, சாலைகளின் எதிரே வந்துகொண்டிருந்த மற்றும் நின்று கொண்டிருந்த ஏராளமான வாகனங்கள் மீது பலமாக மோதியது. இதில் ஒருவர் தூக்கி வீசப்பட்டார். மேலும் வாகனங்கள் நொறுங்கி சேதமடைந்தன. இடித்து தள்ளிய அந்த கார், விபத்தையும் ஏற்படுத்திவிட்டு அதே வேகத்தில் சென்றது. அங்கு டீ கொண்டிருந்த நமது நிருபர் உடனடியாக செல்போனை எடுத்து தனது காமிராவில் இந்த சம்பவத்தை படம் பிடிக்க துவங்கினார். இந்த சமயத்தில் அந்த காரின் முன்பகுதியில் பைக் ஒன்று சிக்கி கொண்டது. ஆனால் அப்போதும் அந்த கார் நிற்காமல், சுமார், 20 கிலோ மீட்டர் தூரத்துக்கு அந்த பைக்கை இழுத்து சென்றது.
இதனால் ஆத்திரமும், அதிர்ச்சியும் அடைந்த வாகனங்களின் உரிமையாளர்கள் மற்றும் மாதையங்குட்டை, செக்கனூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வந்த பொதுமக்கள் ஒன்று திரண்டு நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்களில் அந்த காரை பின்தொடர்ந்து சென்று விரட்டி பிடிக்க முயன்றனர். நம்ம செய்தியாளரும் தனது பைக்கை எடுத்து பின்தொடர்ந்து செல்போனில் படம்பிடித்து கொண்டே சென்றார்.
நெடுஞ்சாலையே பரபரப்பாக காணப்பட்டது. சாலையின் இரு பக்க கடைகள் மற்றும் வீடுகளில் இருந்தவர்கள் ஒன்றும் புரியாமல் இந்த காட்சிகளை கண்டு உறைந்து நின்றனர். இறுதியாக அந்த கார் ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே சென்று நின்றது. அதற்குள் வாகனங்களில் வந்த பொதுமக்கள், காரை சுற்றி வளைத்து, காரினுள் இருந்த ஓட்டுனரை வெளியே இழுத்து போட்டு, தர்ம அடி கொடுத்தனர். அப்போது கார் ஓட்டுனர் குடிபோதையில் இருந்ததாக தெரிகிறது.
பிறகு விபத்து ஏற்படுத்தி, பல வாகனங்களை சேதமடைய செய்த அந்த கார் ஓட்டுனர் மீது புகார் பொதுமக்கள்அளித்தனர். புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணையை கையில் எடுத்துள்ளனர். நெடுஞ்சாலை ஒன்றில் வாகனங்கள் மீதும் கார் மோதும் காட்சியும், விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற காரினை நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் மின்னல் வேகத்தில் துரத்தும் அந்த திக்திக் சேசிங் காட்சிகளும் இதோ உங்கள் பார்வைக்கு...