நெல்லை அருகே 10 பேரை பலி கொண்ட விபத்து நடந்தது எப்படி? கால் முறிந்த நிலையில் பஸ் டிரைவர் பேட்டி
நாகர்கோவில்: வேளாங்கண்ணியில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி சென்ற யுனிவர்சல் நிறுவனத்தின் மல்டி ஆக்சில் சொகுசு பஸ், நெல்லை மாவட்டம், வள்ளியூர் அடுத்த பனகுடியில் இன்று அதிகாலை கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10 பயணிகள் உயிரிழந்தனர். இந்த விபத்து எப்படி நடந்தது என்பது குறித்து பஸ் டிரைவர் பேட்டியளித்துள்ளார்.
விபத்தில் சிக்கிய பஸ் டிரைவர் ஜான் பாஸ்கோ (39) கால் முறிவுடன் நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். ஜான் பாஸ்கோ நாகை மாவட்டம் வேதாரண்யத்தை சேர்ந்தவர். சிகிச்சையின்போது ஜான் பாஸ்கோ அளித்த பேட்டி: வேளாங்கண்ணியில் இருந்து நேற்றிரவு 9 மணிக்கு திருவனந்தபுரத்திற்கு புறப்பட்டோம். இன்று அதிகாலை 6 மணிக்கு வள்ளியூரை அடுத்த பிலாக்கொட்டை பாறை அருகே வந்தபோது எதிரே ஒரு லாரி சென்று கொண்டிருந்தது.
லாரியை முந்திச் செல்ல பல முறை வழி கேட்டும் லாரி டிரைவர் இடம் கொடுக்காமல் வேகமாக சென்று கொண்டிருந்தார். இதனால் நான், அந்த லாரியை முந்திச் செல்ல இடதுபுறமாக திருப்பியபோது பஸ் திடீரென கட்டுப்பாட்டை இழந்து ஒருபக்கமாக ஓடியது. சாலையோர தடுப்பில் மோதி கவிழ்ந்தது. அவ்வளவுதான் எனக்கு தெரியும். பிறகு நான் மயக்கம் அடைந்து விட்டேன். கண் விழித்தபோது, மருத்துவமனையில் இருப்பது தெரியவந்தது. இவ்வாறு அவர் கூறினார்.
பஸ்சின் கிளீனர் தங்கதுரை கூறுகையில், "பஸ்சில் முன்பதிவு செய்த பயணிகள் 31 பேர் இருந்தனர். இவர்களை தவிர பயணிகளின் குழந்தைகளும் பஸ்சில் இருந்தனர். இவர்களுடன் மேலும் 4 பேரை ஏற்றிக் கொண்டோம்.
அனைவருமே நாகர்கோவில், மார்த்தாண்டம், களியக்காவிளை செல்ல வேண்டியவர்கள். இதனால் பஸ் பைபாஸ் சாலையில் சென்று கொண்டிருந்தது. நெல்லையை தாண்டியதும் நான் தூங்கி விட்டேன். விபத்து நடந்தது பற்றி எனக்கு ஒன்றுமே தெரியாது. கண் விழித்தபோது காயங்களோடு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தேன்" என்றார்.