வறட்சியை நோக்கி மேற்குத்தொடர்ச்சி மலை பகுதி நீர் நிலைகள்.. தவிப்பில் மக்கள்
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் உள்ள நீர் நிலைகள் தண்ணீர் இன்றி வறட்சி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
தென்காசி: நெல்லை மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் அதிக நீர்தேக்ககங்கள், அருவிகள் என நிரம்ப பெற்ற பகுதியாக விளங்குவது தென்காசி வட்டாரப்பகுதிகள் ஆகும். இந்த பகுதிகள் இயற்கை அன்னையின் கொடையாக விளங்கி வரும் நிலைமாறி கோடையின் வறட்சி பிடியில் சிக்கிவருகிறது.
குற்றாலம் மெயின் அருவிக்கு மேற்குத் தொடர்ச்சி மலையில் இருந்து உற்பத்தியாகி வரும் சித்ரா நதியில் தண்ணீர் வரத்து முற்றிலுமாக நின்றதால் குற்றால மெயினருவி வறண்ட நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதேபோல் ஐந்தருவி, பழைய குற்றால அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளும் தண்ணீரின்றி வறண்ட நிலைக்கு சென்றுள்ளது.

மேலும் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியிலுள்ள செங்கோட்டை குண்டாறு நீர்த்தேக்கம், மேக்கரை அடவிநயினார் நீர்த்தேக்கம், கடையநல்லூர் கருப்பா நதி நீர்த்தேக்கம், புளியரை ஸ்ரீமூலப் பேரி நீர்த்தேக்கம், மோட்டை நீர்த்தேக்கம் உள்ளிட்ட நீர்தேக்கங்களுக்கு மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் இருந்து தண்ணீர் வரத்து முற்றிலுமாக நின்றுவிட்டதால் இங்குள்ள அனைத்து நீர்தேக்கங்களும் வறண்டு வருகின்றன.
அவசர குடி நீர்த்தேவைகளுக்காக கருப்பா நதியில் 35கன அடி நீரும், அடவிநயினார் நீர்த்தேக்கத்தில் 45 கன அடி நீரும், குண்டாற்றில் 20கன அடி நீரும், பிற சிறிய அணைகளில் குறைந்தளவே தண்ணீர் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. அனைத்து ஆறு, குளங்களும், தனியார் கிணறுகளும் தண்ணீரின்றி வறட்சியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
குடிநீருக்காக மக்கள் தனியார் நிலங்களைத்தேடி அலையும் கொடுமையும் நிகழ்ந்து வருகிறது. தென்காசி, செங்கோட்டை, குற்றாலம், கடையநல்லூர், புளியரை உள்ளிட்ட பகுதிகளில் பகுதிகளில் இப்போதே வறட்சியின் கோரமுகம் தலைத்தூக்க தொடங்கியுள்ளதால் மக்கள் தண்ணீருக்காக அலையும் அவலமும் அரங்கேறி வருகிறது.
இந்த கோடையை பயன்படுத்தி கிராம, ஊராட்சி, பேரூராட்சிகளில் புதிய ஆழ்துளைக் கிணறு அமைக்கும் பணியிலும், பழைய ஆழ்துளை கிணறுகளை பராமரிப்பு என்ற பணியில் பணத்தை சுருட்டும் பணியில் சில அரசு அதிகாரிகளும் களத்தில் குதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications