"அப்ப இந்த வாரம் ஊருக்கு போக முடியாதா....." - கர்நாடக ஐடி தமிழர்கள் ஏக்கம்
தமிழக அரசு போக்குவரத்து கழக ஊழியர்களின் போராட்டம் தீவிரமாகி வரும் நிலையில், கர்நாடகத்தில் பணிப்புரியும் ஐடி ஊழியர்கள் வார விடுமுறைக்கு ஊர் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.
Recommended Video
ஓசூர்: வார விடுமுறையை ஊரில் கழிக்கலாம் என்று கனவோடு இருந்த கர்நாடகத்தில் வசிக்கும் தமிழக தொழிலாளர்களும், ஐடி தமிழர்களும் போக்குவரத்து ஊழியர்களின் போராட்டத்தால் செய்வதறியாமல் தவித்து வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. சில இடங்களில் தள்ளுமுள்ளு, தாக்குதல், கைகலப்பு என்று போராட்டம் அடுத்தக்கட்டத்தை எட்டி வரும் நிலையில் பல இடங்களில் போலீசாார் குவிக்கப்பட்டுள்ளனர்.
பலமுறை ஏமாந்துவிட்டோம் இந்த முறை அப்படி நடக்காது என்று முனைப்புடன் போராடி வரும் போக்குவரத்து ஊழியர்களை பணிக்கு திரும்பும்படி அரசு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. பல ஆசை வார்த்தைகளை அரசு கூறி வந்தாலும் கோரிக்கைகள் நிறைவேறாமல் போராட்டத்தை கைவிடுவதாக இல்லை என ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் மக்கள் இந்த போராட்டத்தால் அவதிக்குள்ளாகி வந்தாலும், மாநில எல்லைப்பகுதிகளில் வசிக்கும் வியாபாரிகள், தொழிலாளர்கள், பணியாளர்கள் என்று அனைவரும் கூடுதலாக சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். கேரளா, ஆந்திரா, கர்நாடக எல்லையோரம் வசிக்கும் மக்களும், பிற மாநிலங்களில் பணியில் இருக்கும் தொழிலாளர்களும், ஐடி ஊழியர்களும் பணிக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.
மேலும் வார விடுமுறையான இன்று சொந்த ஊர் திரும்பலாம் என்று கணக்கிட்டிருந்த கர்நாடக ஐடி ஊழியர்கள் இந்த ஸ்டிரைக்கால் செய்வதறியாமல் தவித்து வருகின்றனர். பலர் பேருந்துகளில் முன்பதிவு செய்திருந்த வேளையில், பாதுகாப்பை கருத்தில் கொண்டு போகலாமா வேண்டாமா என்று யோசனையில் உள்ளனர்.
பிற மாநில பேருந்துகளும் தமிழகத்தில் தாக்குதலுக்கு உள்ளாகி வருவதால், மற்ற கர்நாடகா மற்றும் ஆந்திரா போக்குவரத்து கழகங்களும் பேருந்துகளை இயக்க தயக்கம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.