சென்னையில் ஆங்காங்கே தேங்கி கிடக்கும் மழைநீர்....கொசுக்கடியால் தோற்று நோய் பரவும் அபாயம்
சென்னை: சென்னையில் பெய்த கனமழையால் பெரும்பாலான இடங்களில் நீர் குளம்போல் தேங்கியுள்ளது. இதனால் கொசுக்கள் ஏராளமாக பெருகியுள்ள நிலையில் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தேங்கியுள்ள மழை நீரை அகற்றும் பணியில் மாநகராட்சி பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் ஆட்கள் பற்றாக்குறை காரணமாக ஆங்காங்கே பணிகள் தொய்வுற்று காணப்படுகிறது. பல இடங்களில் நீண்ட நாட்களாக மழைநீர் தேங்கி உள்ளதால் கொசுக்கள் ஏராளமாக உருவாகி பல்வேறு விதமான தொற்று நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் பல்வேறு விதமான காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வருகின்றனர். இதனை தடுக்கும் விதமாக மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு இடங்களில் கொசு மருந்து அடித்து வருகிறது. தேங்கிய மழைநீர் மற்றும் குடிநீர் தொட்டிகளில் பிளீச்சிங் பவுடர் தெளிக்கப்பட்டு வருகிறது.
பொதுமக்களை இதுபோன்ற தொற்றுநோய்கள் மற்றும் மர்ம காய்ச்சலில் இருந்து காக்கும் விதமாக சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம் தொடங்கப்பட்டுள்ளது. இதில் நிலவேம்பு குடிநீர் மற்றும் மருந்து மாத்திரைகள் கொடுக்கப்பட்டு வருகிறது. மேலும் அம்மா உணவகங்களிலும் நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 17-ந்தேதி தொடங்கப்பட்ட சிறப்பு மருத்துவ முகாமில் ராஜீவ்காந்தி, கீழ்ப்பாக்கம், ராயப்பேட்டை அரசு மருத்துவமனைகளில் காய்ச்சலுக்காக 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. டெங்கு காய்ச்சலால் பதிக்கப்பட்டு சென்னை அரசு மருத்துவமனைகளில் மட்டும் 44 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.












Click it and Unblock the Notifications