ஸ்டாலினுக்கு புகழாரம்.. அப்படியே தயாநிதி மாறன் அடிமடியில் கை வைத்த துரைமுருகன்.. பொதுக்குழுவில் கலகல
Recommended Video

சென்னை: திமுக தலைவர் ஸ்டாலினுக்கு அக்கட்சி பொருளாளர் துரைமுருகன் பொதுக்குழு கூட்டத்தில் புகழாரம் சூட்டினார்.
ஏற்புரையேற்று, துரைமுருகன் பேசியதாவது: மரியாதைக்குரிய என் தலைவர் மு.க.ஸ்டாலின் என்று, நான் அழைப்பதற்கு இத்தனை நாள் வாழ்ந்தேனே அது போதும். நான் உங்கள் வீட்டிற்கு வந்தபோது நீங்கள் குட்டிப் பையன். அரைக்கால் சட்டை போட்டிருந்தீர்கள். வளர்ந்து தோழனாகி இன்று தலைக்கு மேல் வளர்ந்து தலைவானாகி வீட்டீர்கள்.

இதனால் எனக்கு, மகிழ்ச்சி, மகிழ்ச்சி, உள்ளார்ந்த மகிழ்ச்சி. எவ்வளவோ மேடைகளில் பேசியவன் நான். இப்போது பேச எனக்கு வார்த்தை வரவில்லை. எனது கண்ணீர் இன்னும் நிற்கவில்லை.. எனது இதயச்சுமை இறங்கவில்லை.
பொருளாளர் தகுதிக்கு என்னை உயர்த்தி வைத்துள்ளீர்கள். அதற்கு நான் தகுதி உடையவனாக கருதவில்லை. ஆனால் நீங்கள் என்னை உயர்த்தியுள்ளதால் அதற்குரியவானாக நான் திகழ்வேன். என் தலைவர் படுத்திருக்கிற திக்கு நோக்கி வணங்கி எனது பொறுப்பை ஏற்கிறேன்.

திராவிட, முன்னேற்றக் கழகம் மிகப் பெரிய இயக்கம். கருணாநிதி பொறுப்பை ஏற்றபோது அவரோடு நான் இருந்தேன். ரெட் கார்பெட்டில் நடந்து வந்து அவர் பதவியேற்கவில்லை. கருணாநிதி சிலுவையைச் சுமந்து வந்து பொறுப்பை ஏற்றார். ஏராளமான எதிர்ப்பை ஏற்று பதவிக்கு வந்தார் கருணாநிதி.
ஆனால் ஸ்டாலின் ஒரு சிறு சலசலப்பும் இல்லாமல் மனக்குறை இல்லாமல் பதவிக்கு வந்துள்ளார். அந்தக் கட்டத்தையும் நினைத்துப் பார்க்கிறேன்.. இதையும் நினைததுப் பார்க்கிறேன். உன்னோடும், உன் தந்தையோடும் நடந்து வந்துள்ளேன். நான் அண்ணாவோடு அரசியல் நடத்தியவர், கலைஞரோடு பழகியவன்.
எத்தனையோ பதவிகளை திமுகவில் ஏற்றுள்ளேன். ஆனால் நான் கழகத்தின் பேச்சாளன் என்பதில்தான் எனக்குப் பெருமை.
நூற்றாண்டு இயக்கத்தை வழி நடத்தப் போகிற அடுத்த கட்டம் ஸ்டாலினிடம் வந்துள்ளது. நீங்கள் ஒரு சரித்திர புருஷன்.. வரலாற்றில் இடம் பெறப் போகிற தலைவர் நீங்கள். இது பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக உருவாக்கப்பட்ட இயக்கம் இது.
பொருள் வைத்துள்ளவர்கள் இயக்கத்திற்காக பொருள் தாருங்கள். பொருள் இல்லாதவர்கள் உங்கள் ஆதரவை தாருங்கள்.
இந்த இயக்கத்தில் அதிக பொருள் வைத்துள்ளவர்கள் குறைவு. அப்படி பொருள் அதிகம் வைத்துள்ளது சன் குழுமம். எனவே, தயாநிதி மாறன் அதிக நிதியை திமுகவிற்கு அளிப்பார் என அவரிடம் மடியேந்தி செல்கிறேன். இவ்வாறு துரைமுருகன் தெரிவித்ததோடு, மடியேந்துவதை போல மேடையில் நின்றபடி சைகை செய்து காட்டினார்.
இதை பார்வையாளர் பகுதியில் இருந்து பார்த்துக்கொண்டிருந்த தயாநிதி மாறன் பார்த்து குலுங்கி சிரித்தார். ஆ.ராசா உள்ளிட்டோரும் துரைமுருகனின் சாமர்த்தியத்தை சொல்லி குலுங்கி சிரித்தனர்.
முன்னதாக விழா மேடையில், பேசிய தயாநிதி மாறன், ஸ்டாலின் போல துரைமுருகன் ஓடியாடி நிதி வசூல் செய்ய வேண்டும் என கூறியிருந்தார். எனவே, வசூலை தயாநிதி மாறனிடமிருந்தே, துரைமுருகன் துவங்கிவிட்டார் என்பது, குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications