அதிமுகவின் எந்த அணியோடு திமுக கூட்டணி.. கருணாநிதி சொன்னது என்ன? ரகசியம் உடைத்த துரைமுருகன்!
ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு அதிமுக இரண்டு அணிகளாகப் பிரியும் அவ்வாறு பிரிந்தால் எந்த அணியுடனும் திமுக கூட்டணி வைக்கக் கூடாது என்று கருணாநிதி முன்கூட்டியே சொல்லிவிட்டதாக துரைமுருகன் கூறியுள்ளார்.
Recommended Video
சென்னை : ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு அதிமுக பிளவுபடும், அப்படி பிரிந்தால் எந்த அணியுடனும் கூட்டணி வைக்கக் கூடாது என்று திமுக தலைவர் கருணாநிதி கடந்த ஆண்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் முன்னர் சொல்லிவிட்டு சென்றதாக அந்த கட்சியின் முதன்மை செயலாளர் துரைமுருகன் கூறியுள்ளார்.
ஜெயா டிவியின் விடைக்குள் வினா நிகழ்ச்சியில் திமுகவின் முதன்மைச் செயலாளர் துரைமுருகனின் பேட்டி ஒளிபரப்பானது. அந்த நிகழ்ச்சியில் நெறியாளரின் கேள்விகளுக்கு துரைமுருகன் பதிலளித்தார். அப்போது தற்போதைய அரசியல் சூழலில் கருணாநிதி இருந்திருந்தால் காட்சிகளே மாறி இருக்கும் என்று அனைவரும் கூறுகிறார்களே.
அவ்வாறு கருணாநிதி இருந்திருந்தால் என்ன மாற்றம் நடந்திருக்கும் என்று நெறியாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த துரைமுருகன்,
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, கருணாநிதியும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனை செல்லும் முன்னர் அவர் நான், ராஜா, பொன்முடி உள்ளிட்டோர் இருந்த போது ஒரு ஒரு செய்தியை சொல்லிவிட்டுப் போனார்.
கருணாநிதி சொன்ன ரகசியம்
அப்போது ஜெயலலிதா உடல்நிலை தேறி வீடு திரும்ப வேண்டும். அவ்வாறு இல்லாமல் வேறு ஏதேனும் நடந்தால் நிச்சயம் அந்த கட்சி இரண்டாகப் பிரியும்.அப்படி கட்சி பிரியும் போது ஏதேனும் ஒரு அணி நம்மிடம் வந்து ஆதரவு கேட்கலாம். அப்படி ஆதரவு கேட்டால் கூட யாருக்கும் ஆதரவளிக்கக் கூடாது. எம்ஜிஆர் மறைவின் போது அதிமுக ஜானகி அணி, ஜெ. அணி என பிரிந்த போதும் என்னிடம் வந்து ஆதரவு கேட்டார்கள் ஆனால் அப்போது நான் மறுத்துவிட்டேன்.
பிறர் தோளில் பயணம் கூடாது
ஒருவேளை நீங்கள் யாருடைய அணிக்காவது ஆதரவு தெரிவித்தால் அது வரலாற்றில் அவப்பெயரை ஏற்படுத்தி விடும். மக்கள் நம்மை ஏற்க மாட்டார்கள், பிரத்தியார் தோளில் எப்போதுமே பயணிக்கக் கூடாது. தேர்தலில் போட்டியிட்டு மக்களின் வாக்குகளைப் பெற்று தான் ஆட்சியில் அமர வேண்டும்.
புறவாசல் ஆட்சி கூடாது
அதை விடுத்து ஏதோ ஒரு அணியை ஆதரித்து அவர்கள் ஆட்சி அமைத்தாலோ, அல்லது அவர்கள் ஆதரவில் திமுக ஆட்சியில் அமர்ந்தாலோ மக்கள் மன்னிக்க மாட்டார்கள். புறவாசல் வழியாக எந்த காரணத்தைக் கொண்டும் ஆட்சியில் அமரக் கூடாது என்று கருணாநிதி எங்களிடம் சொல்லிவிட்டார்.
ஆளுநரிடம் முறையிட்டோம்
எனவே எதிர்க்கட்சி என்ற முறையில் இந்த ஆட்சிக்கு எதிராக அரசியல் விதிப்படி என்ன செய்யவேண்டுமோ அதைத்தான் திமுக செய்து கொண்டிருக்கிறது. ஆளுநரை சந்தித்து அவர்களுக்கு பெரும்பான்மை இல்லை என்பதைச் சொன்னோம். ஆனால் முடிவு எடுக்க வேண்டிய ஆளுநர் மத்திய அரசின் அனுமதிக்காக காத்திருந்தார் என்று துரைமுருகன் கூறினார்.