குடும்ப அரசியல்: மு.க. ஸ்டாலின் பார்முலாவை அப்படியே காப்பியடிக்கும் டிடிவி தினகரன்
குடும்ப அரசியல் விவகாரங்களை கையாள்வதில் மு.க.ஸ்டாலினின் பார்முலாவை அப்படியே காப்பிடியக்கிறார் டிடிவி தினகரன்.
சென்னை: குடும்பத்தினரின் அரசியல் தலையீட்டை எப்படி முறியடிப்பது என்ற திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலினின் பார்முலாவை அப்படியே அதிமுவின் நியமன துணைப் பொதுச்செயலர் டிடிவி தினகரன் காப்பியடித்து வருவது அக்கட்சியினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
திமுகவைப் பொறுத்தவரையில் கருணாநிதி குடும்பத்தைச் சேர்ந்த ஸ்டாலின் முதலில் அரசியலுக்குள் நுழைந்தார். பின்னர் முக அழகிரி, கனிமொழி ஆகியோரும் அடுத்தடுத்து நுழைந்தனர்.
இதனால் கருணாநிதி வேறுவழியில்லாமல் ஸ்டாலின், அழகிரி, கனிமொழி மூவருக்கும் ஏறத்தாழ சரி சமமான கட்சி, ஆட்சியில் பதவிகளைக் கொடுத்தார். டெல்லியில் மு.க. அழகிரி மத்திய அமைச்சராக பதவி ஏற்று சென்னை வரும் போது மு.க.ஸ்டாலின் துணை முதல்வராகி இருந்தார். கனிமொழி ராஜ்யசபா எம்.பி..யாக்கப்பட்டார். அதேபோல் கட்சியிலும் ஸ்டாலின் பொருளாளரானார். அழகிரி தென்மண்டல அமைப்புச் செயலரானார்.
அழகிரி, கனிமொழி
ஆனால் காலப்போக்கில் ஸ்டாலினின் வியூகத்தில் அழகிரி, அரசியலை விட்டே போய்விட்டார். கனிமொழியை ஓரம்கட்டி ஒதுக்கி வைக்கப்பட்டுவிட்டார். கிட்டத்தட்ட இதே பார்முலாவைத்தான் தினகரன் கையிலெடுத்திருக்கிறார்.
இலவு காத்த கிளிகள்
ஜெயலலிதா மர்ம மரணத்துக்குப் பின்னர் அதிமுகவை கபளீகரம் செய்தார் சசிகலா. அப்போது சசிகலா குடும்பத்தைச் சேர்ந்த நடராஜன், திவாகரன், தினகரன், வெங்கடேஷ் என பலருக்கும் அதிமுகவும் ஆட்சியும் பங்கு பாகம் பிரித்து கொடுக்கப்பட்டதாக கூறப்பட்டது.
ஓங்கிய தினகரன்
தற்போது சசிகலா சிறைக்குப் போய்விட்டார். சிறைக்குப் போகும்போது தினகரன், வெங்கடேஷை கட்சியில் சேர்த்து பொறுப்புகளையும் அள்ளிக் கொடுத்தார். அவ்வளவுதான் தினகரன் கை ஓங்க தொடங்கியது. வெங்கடேஷ் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டார்.
ஸ்டாலின் - தினகரன்
அப்படியே நடராஜன், திவாகரன் எல்லோரையும் ஒதுக்கி வைத்துவிட்டார். தற்போது கட்சியும் ஆட்சியும் தினகரன் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டது. குடும்ப அரசியலை கையாள்வதில் இப்போது ஸ்டாலின், தினகரன் இடையேயான ஒற்றுமைதான் என்னே! என கலாய்க்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.