அ.தி.மு.க. தண்ணீர் பந்தலில் இரட்டை இலை சின்னம்: தேர்தல் ஆணைய உத்தரவு மீறல்
சென்னை: கடலூரில் அ.தி.மு.க., சார்பில் திறக்கப்பட்டுள்ள தண்ணீர் பந்தலில் உள்ள பானைகளில் தேர்தல் விதிகளை மீறி இரட்டை இலை சின்னம் வரையப்பட்டுள்ளது.
கோடை காலம் துவங்கியதும், மக்கள் கூடும் இடங்களில் அரசியல் கட்சிகள் மற்றும் தன்னார்வ அமைப்பினர் நீர், மோர் பந்தல் திறப்பதும், அதில் தாங்கள் சார்ந்த கட்சியின் சின்னத்துடன் விளம்பர தட்டிகளும், கொடி தோரணங்களும் கட்டுவார்கள்.
இந்தாண்டு கடந்த மார்ச் மாதம் 5ம் தேதி லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அரசியல் கட்சியினர் தண்ணீர் பந்தலை திறப்பதைத் தவிர்த்தனர்.
விதிமுறை தளர்வு
கடந்த 24ம் தேதி ஓட்டுப்பதிவு முடிந்ததைத் தொடர்ந்து, அரசியல் கட்சிகள் தண்ணீர் பந்தலை திறக்கும் வகையில் விதிமுறைகளை சற்று தளர்த்தியது.
கட்சி சின்னம் வைக்க தடை
மேலும், திறக்கப்படும் தண்ணீர் பந்தல்களில் கட்சியின் சின்னம் எதுவும் இடம் பெறக்கூடாது என்றும், மீறினால் வழக்கு தொடரப்படும் என தேர்தல் ஆணையம் எச்சரித்தது.
அதிமுக தண்ணீர் பந்தல்
இந்நிலையில், கத்திரி வெயில் துவங்கியதால், மக்கள் கூடும் இடங்களில் தண்ணீர் பந்தல் திறக்குமாறு அ.தி.மு.க.,வினருக்கு முதல்வர் ஜெ., உத்தரவிட்டார். அதன்பேரில் கடலூர், மஞ்சக்குப்பத்தில், நகர அ.தி.மு.க., சார்பில் அமைக்கப்பட்ட தண்ணீர் பந்தலை நேற்று முன்தினம் காலை கொட்டும் மழையில் அமைச்சர் சம்பத் திறந்து வைத்தார்.
இரட்டை இலை
இந்த பந்தலில் தண்ணீர் நிரப்பி வைத்துள்ள இரண்டு பானைகளிலும் கட்சிக் கொடியின் வர்ணம் பூசி, அதில் வெள்ளை நிறத்தில் அ.தி.மு.க.,வின் சின்னமான இரட்டை இலையை வரைந்து வைத்துள்ளனர். தேர்தல் நடத்தை விதிகளை மீறி சின்னத்துடன் அமைக்கப்பட்ட இந்த தண்ணீர் பந்தலை அமைச்சரே திறந்து வைத்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தேமுதிக தண்ணீர் பந்தல்
தேமுதிக தலைவர் விஜயகாந்த் கேட்டுக் கொண்டதால் தே.மு.தி.க. வினரும் தண்ணீர் பந்தல்களை திறந்துள்ளனர். மற்ற கட்சிகள் சார்பிலும் தண்ணீர் பந்தல்கள் திறக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
தேர்தல் ஆணையம் எச்சரிக்கை
இந்த நிலையில், கட்சிகள் சார்பில் திறக்கப்படும் தண்ணீர் பந்தல்களில் கட்சி சின்னம் இடம் பெறக்கூடாது என்று தேர்தல் ஆணையம் மீண்டும் உத்தரவிட்டுள்ளது.
தேர்தல் நடத்தை விதிமுறை
லோக்சபா தேர்தல் இன்னும் முடிவடைய வில்லை. மே 12-ந் தேதி இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தற்போது தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் உள்ளது. எனவே, தண்ணீர் பந்தலில் கட்சி சின்னங்கள் இடம் பெறக் கூடாது என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
மே 28 வரை தடை
வருகிற 16ம்தேதி ஓட்டுக்கள் எண்ணப்படுகின்றன. மே மாதம் 28ம் தேதி வரை தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் இருக்கும். எனவே, அதுவரை அரசியல் கட்சிகள் தண்ணீர் பந்தல்களில் கட்சி சின்னத்தை வைக்க கூடாது என்றும் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.