மணல் மாஃபியா சேகர் ரெட்டியின் ரூ. 34 கோடி சொத்துக்கள் முடக்கம்
சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சேகர் ரெட்டியின் ரூ.34 கோடி ரூபாய் பெறுமானமுள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
சென்னை: சட்ட விரோத பணபரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள மணல் மாஃபியா சேகர் ரெட்டியின் 34 கோடி ரூபாய் பெறுமானமுள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
கடந்த 2011 -2016 அதிமுக ஆட்சி காலத்தில் போயஸ் கார்டன் லாபியில் நெருக்கமான சேகர் ரெட்டி தமிழ்நாட்டில் பல இடங்களில் மணல் குவாரியை குத்தகைக்கு எடுத்தார். இதன் மூலம் கோடி கோடியாக கொட்டியது.
நவம்பர் மாதம் மத்திய அரசு அறிவித்த பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு கறுப்பு பணம், கள்ளப்பணத்தை ஒழிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
சென்னையில் நடைபெற்ற சோதனையில், தொழிலதிபர் சேகர்ரெட்டியின் வீட்டில் இருந்து 147 கோடி ரூபாய் பணமும், 178 கிலோ தங்கமும் பறிமுதல்செய்யப்பட்டது. அதில், 10 கோடி ரூபாய்க்கும் மேல் புதிய 2,000 ரூபாய் நோட்டுகளும் பிடிபட்டன.
சிபிஐ விசாரணை
சட்டவிரோதமாக 34 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய ரூபாய் நோட்டுகளைப் பதுக்கி வைத்திருந்ததாக போயஸ் இல்லத்திற்கு நெருக்கமானவராக அறியப்படும், தொழிலதிபர் சேகர் ரெட்டி மற்றும் அவரின் கூட்டாளிகளான பிரேம்குமார், சீனிவாசலு, திண்டுக்கல் ரத்தினம், புதுக்கோட்டை ராமச்சந்திரன் ஆகியோரை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், சிபிஐ கைதுசெய்தது.
சேகர் ரெட்டி கூட்டாளிகள்
சேகர் ரெட்டியின் கூட்டாளிகள் அசோக்ஜெயின், மஹாவீர்ஜெயின் ஆகியோருக்குச் சொந்தமான 12 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறையினர் முடக்கியுள்ளனர். மேலும், பரஸ்மல் லோதாவின்மூலம் சேகர் ரெட்டிக்கு 7 கோடி ரூபாய்க்கான புதிய நோட்டுகள் மாற்றப்பட்டதும் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சேகர் ரெட்டியின் வீட்டில் கண்டெடுக்கப்பட்ட டைரியில் இருந்த குறிப்புகளை வைத்து ராமமோகன் ராவ் வீட்டில் சோதனை நடைபெற்றது.
ஜாமீனில் விடுதலை
சேகர் ரெட்டி, சீனிவாசலு, பிரேம்குமார் ஆகிய மூவருக்கும் கடந்த மார்ச் 17ம் தேதி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இதையடுத்து அவர்கள் சிறையிலிருந்து வெளியே வந்தனர்.
அமலாக்கத்துறை விசாரணை
திடீரென சேகர் ரெட்டியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. சென்னை, கிரீம்ஸ் சாலையில் உள்ளது அமலாக்கத்துறை அலுவலகம். இங்கு சேகர் ரெட்டியை வரவழைத்து விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில் 10 மணிநேர விசாரணைக்கு பின்னர் சேகர் ரெட்டியை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். மேலும், சீனிவாசலு, பிரேம்குமார் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
சொத்துக்கள் முடக்கம்
இந்த நிலையில் சேகர் ரெட்டிக்குச் சொந்தமான ரூ.34 கோடி பெறுமானமுள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை இன்று முடக்கியுள்ளது. விஜயபாஸ்கரின் மனைவி ரம்யாவிடம் நேற்று 8 மணிநேரம் வருமானவரித்றை அதிகாரிகள் விசாரனை நடத்திய நிலையில் இன்று திடீரென சேகர் ரெட்டியின் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.