தினகரனை நீக்கி ஓபிஎஸ் அணியின் கோரிக்கையை நிறைவேற்றிய எடப்பாடி கோஷ்டி
அணிகளை இணைக்க ஓபிஎஸ் விதித்த நிபந்தனைகளில் ஒன்றை நிறைவேற்றியுள்ளது எடப்பாடி பழனிச்சாமி கோஷ்டி.
சென்னை: டிடிவி தினகரன் துணைப் பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்பட்டது செல்லாது என்று தீர்மானம் போட்டதை அடுத்து ஓபிஎஸ் அணியின் ஒரு கோரிக்கையை நிறைவேற்றியுள்ளது எடப்பாடி கோஷ்டி.
ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு அதிமுக இரு அணிகளாக பிளவு பட்டது. சசிகலா அணி, ஓபிஎஸ் அணியாக பிரிந்தது. ஆர். கே.நகர் இடைத்தேர்தலின் போது இரு அணிகளுமே தனித்தனியாக களமிறங்கின. இருவருமே கட்சி, கொடி,சின்னத்திற்கு மோதவே, தேர்தல் ஆணையம் இரட்டை இலை, கொடியை முடக்கியது.
ஓபிஎஸ் நிபந்தனை
இதனையடுத்து அணிகளை இணைக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பு கிளம்பியது. இதற்கு ஓபிஎஸ் அணி இரண்டு நிபந்தனைகளை விதித்தது. ஜெயலலிதா மரணத்திற்கு நீதி விசாரணை வேண்டும் என்றும், சசிகலா குடும்பத்தை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் கூறினார்.
பேச்சு வார்த்தையில் இழுபறி
இதற்கு முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் மாதம் அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்த சசிகலாவின் படங்கள் அகற்றப்பட்டன. ஆனால் இருவரையும் ஒதுக்கி வைப்பதாகத்தான் கூறினர். ஆனால் இணைப்பு பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்தது.
தினகரனுக்கு எதிரான தீர்மானம்
இந்த சூழ்நிலையில் அதிமுக அம்மா அணியே இரண்டாக பிளவு பட்டுள்ளது. தினகரன் தலைமையில் ஒரு அணி செயல்படுகிறது. தினகரன் தன்னிச்சையாக கட்சி நிர்வாகிகளை நியமனம் செய்து வருகிறார். டிடிவி தினகரன் நியமனம் செல்லாது என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளது எட்ப்பாடி பழனிச்சாமி கோஷ்டி.
ஒபிஎஸ் கோஷ்டிக்கு சாதகம்
இதன்மூலம் ஓபிஎஸ் அணிக்கு சாதகமாக ஒரு கோரிக்கையை ஏற்றுக்கொண்டு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது எடப்பாடி பழனிச்சாமி கோஷ்டி. இதன் மூலம் அணிகள் இணையுமா? அல்லது தினகரன் ஆதரவாளர்களால் கலகம் உருவாகி ஆட்சி கலையுமா என்பதே அரசியல் நோக்கர்களின் கேள்வி.
அவசர ஆலோசனை
இதனிடையே சென்னை கிரீன்வேஸ் இல்லத்தில் முன்னாள் முதல்வர் ஒ. பன்னீர்செல்வம் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதிமுக துணைப் பொது செயலாளராக டிடிவி தினகரன் நியமிக்கப்பட்டது சட்டவிரோதம் என எடப்பாடி கோஷ்டி கூறியதையடுத்து இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.