தினகரனுக்கு 25 எம்எல்ஏக்கள் ஆதரவு- பெரும்பான்மையை இழந்தது எடப்பாடி அரசு- எந்த நேரத்திலும் கவிழும்?
டிடிவி தினகரனுக்கு ஆதரவு எம்ஏக்கள் அதிகரித்து வருவதால் எடப்பாடி பழனிச்சாமி அரசு பெரும்பான்மையை இழந்து விட்டார்.
சென்னை: டிடிவி தினகரனுக்கு தற்போதுவரை 25 எம்எல்ஏக்கள் ஆதரவாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. செந்தில்பாலாஜி, தோப்பு வெங்கடாசலம் உள்ளிட்ட தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் அவர் எதிர்கால அரசியல் பற்றி ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து எடப்பாடி பழனிச்சாமிக்கு 97 எம்எல்ஏக்கள் மட்டுமே உள்ளதால் அவர் தனது பெரும்பான்மையை இழந்து விட்டார்.
ஜெயலலிதா மறைவுக்கு பின் இரண்டாக பிளவுப்பட்ட அதிமுகவில், தற்போது தினகரன் தலைமையில் மூன்றாவதாக ஒரு அணி உருவாகியுள்ளது.
இரட்டை இலை சின்னத்தை மீட்பதற்காக தேர்தல் ஆணையததிற்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில், ஜாமீனில் வெளிவந்துள்ள தினகரன் மீண்டும் கட்சிப் பணியாற்ற போவதாக கூறியுள்ளார். தினகரனை கட்சியை விட்டு ஒதுக்கி வைக்கும் முடிவில் மாற்றம் இல்லை என்று, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சர்கள் தெரிவித்து விட்டனர். துணை பொது செயலாளரான தம்மை ஒதுக்கும் அதிகாரம் அமைச்சர்களுக்கு இல்லை என கூறியுள்ள தினகரனுக்கு வெளிப்படையாகவே 25 எம்எல்ஏக்கள் ஆதரவாக உள்ளனர்.
காலை முதலே டிடிவி தினகரன் வீட்டிற்கு எம்எல்ஏக்கள் வந்த வண்ணம் உள்ளனர். தோப்பு வெங்கடாசலம், செந்தில் பாலாஜி உள்ளிட்ட 8 பேர் காலையில் வந்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஆலோசனை நடத்தி வருகின்றனர். இன்னும் பல எம்எல்ஏக்கள் டிடிவி தினகரன் பக்கம் வர உள்ளதாக கூறப்படுகிறது.
எடப்பாடி பழனிச்சாமியின் பெரும்பான்மை படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது. சபாநாயகர் நீங்கலாக அதிமுகவில் 134 எம்எல்ஏக்கள் உள்ளனர். ஓபிஎஸ் அணியில் 12 எம்எல்ஏக்கள் உள்ளனர். 25 எம்எல்ஏக்கள் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக உள்ளனர். எடப்பாடி பழனிச்சாமிக்கு தற்போது வரை 97 எம்எல்ஏக்கள் ஆதரவாக உள்ளனர்.
3 அணிகளாக அதிமுக செயல்படுவதால் ஜூன் 14 ஆம் தேதி சட்டசபை கூடும்போது எடப்பாடி பழனிச்சாமி தனது பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க முடியுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.