தினகரனுக்கு 'நோ' இமேஜ்.. அடுத்த "பொ.செ" நான்தான்.. எம்.எல்.ஏக்களிடம் எகிறிய எடப்பாடி!
முதல்வர் பதவி எப்படி தம்மை தேடி வந்ததோ அதேபோல அதிமுக பொதுச்செயலர் பதவியும் எளிதாக கிடைக்கும் என நம்பிக்கையில் இருக்கிறாராம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.
சென்னை: தமக்கு முதல்வர் பதவி தேடி வந்தது போல அதிமுக பொதுச்செயலர் பதவியும் தானாகவே வந்து சேரும் என்று நம்பிக்கையோடு காத்திருக்கிறாராம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.
சசிகலா குடும்ப உறவுகளுக்குள் தற்காலிக சமாதான உடன்படிக்கை ஏற்பட்டிருக்கிறது. நமது குடும்பத்துக்காக மட்டுமே உழைத்த சசிகலா, சிறையில் துன்பத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறார். நாம் இன்னமும் சண்டை போட்டுக் கொண்டுதான் இருக்க வேண்டுமா? என மன்னார்குடி குடும்பத்துக்கு மூத்தவர் கூறிய வார்த்தைகளுக்குக் கட்டுப்பட்டு, தினகரனும் திவாகரனும் கைகோர்த்துள்ளனர். இவர்கள் குடும்பத்துக்குள் ஒற்றுமை வந்தாலும், நான் ஏன் தினகரனை முன்னிறுத்த வேண்டும்? என எம்.எல்.ஏக்களிடம் கொதித்திருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
திகார் சிறையில் இருந்து வெளிவந்த நாளில் இருந்து, ஆட்சிக்கு எதிராக எம்.எல்.ஏக்களை அணி திரட்டும் வேலையில் தீவிரம் காட்டினார் டி.டி.வி.தினகரன். தற்போது வரையில் 34 எம்.எல்.ஏக்கள் அவரை ஆதரிப்பதாக தகவல்கள் வெளியாகின.
தினகரன் ஏமாற்றம்
இப்படியொரு பலத்தைக் காட்டக் காரணமே, ஜனாதிபதி தேர்தலில் அ.தி.மு.கவின் ஆதரவைக் கேட்டு, பா.ஜ.க தலைமை தம்மை நோக்கி வரும் என எதிர்பார்த்தார் தினகரன். ஆனால் அப்படியான எந்த ஒரு சூழலும் அமையவில்லை.
தம்பிதுரை கருத்து
டெல்லியில் லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரையை சந்தித்து ஆதரவு கோரினார் மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு. அவரும் கட்சித் தலைமைதான் முடிவெடுக்கும் எனப் பொதுவாகக் கூறினார்.
தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள்
சசிகலா சிறையில் உள்ள நிலையில் ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.கவுக்கு ஆதரவு கொடுப்பதை முன்பே உறுதி செய்துவிட்டார் எடப்பாடி பழனிசாமி. தற்போது சசிகலா குடும்ப உறவுகளுக்குள் ஒற்றுமை ஏற்பட்டுள்ள நிலையில், கட்சிப் பதவிக்கு தினகரனை முன்னிறுத்த வேண்டும் என அவர் ஆதரவு எம்.எல்.ஏக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
எடப்பாடிக்கு மிரட்டல்
இதுதொடர்பாக, எம்.எல்.ஏக்கள் தங்க.தமிழ்ச்செல்வன், வெற்றிவேல் உள்பட 20-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்கள் எடப்பாடியை சந்தித்துள்ளனர். அப்போது, கட்சிப் பணிகளில் தினகரன் கவனம் செலுத்துவார். அரசு நடத்தும் இப்தார் விழாவில் அவரை முன்னிறுத்த வேண்டும். அவருக்கென்று ஒரு இமேஜ் இருக்கிறது. இல்லாவிட்டால், கட்சித் தலைமை அலுவலகத்துக்கு அவர் வருவதை யாராலும் தடுக்க முடியாது எனக் கறாராக கூறியுள்ளனர்.
தினகரனுக்கு இமேஜ் இருக்கிறதா?
எம்.எல்.ஏக்கள் சொல்வதைக் கேட்டுக் கொண்ட எடப்பாடி பழனிசாமி, தினகரனுக்கு இமேஜ் இருக்கிறது என்று நீங்கள்தான் சொல்கிறீர்கள். அந்தத் தம்பியை எனக்கும் பிடிக்கும். அவருக்கு ஓட்டு பலம் இருக்கிறது என நீங்கள் நினைக்கிறீர்களா? மக்கள் மத்தியில் அவருக்கு எதிரான மனநிலை இருப்பதாகத்தான் எனக்குக் கிடைக்கும் அறிக்கைகள் சொல்கின்றன. நான் இந்த இடத்தில் இருப்பதால்தான், அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அமைதியாக இருக்கிறேன். ஓபிஎஸ்ஸைவிட மக்கள் மத்தியில் என்னுடைய ரேட்டிங் குறைவானதற்குக் காரணமே, உங்கள் ஆதரவில் இருந்ததுதான். இப்தார் நோன்பு திறப்பு விழாவுக்கும் அவரை அழைக்க முடியாது என உறுதிபடக் கூறிவிட்டார்.
சசிகலாவுக்கு ஆப்பு உறுதி
இதுகுறித்து நம்மிடம் பேசிய கொங்கு மண்டல பிரமுகர் ஒருவர், ஆட்சியில் மட்டுமல்ல, கட்சியிலும் தன்னை வலுப்படுத்திக் கொள்ள நினைக்கிறார் எடப்பாடி பழனிசாமி. ஜெயலலிதா இருந்தவரையில், கட்சித் தலைமையில் இருந்தவர்தான் ஆட்சியிலும் தலைமை வகித்தார். அதேநிலை தொடரட்டும்' என அவருக்கு ஆதரவான டெல்லி பிரமுகர்கள் வலியுறுத்தி வருகின்றனர். அத்துடன் சசிகலாவின் பொதுச் செயலாளர் பதவி செல்லுமா? என்பது குறித்து தேர்தல் ஆணையம் அறிவிக்க இருக்கிறது. நிச்சயம் சசிகலா பதவி செல்லாது என்ற உத்தரவுதான் வரும்' என எடப்பாடி உறுதியாக இருக்கிறார்.
அதிமுக பொதுச்செயலராக எடப்பாடி
அப்படியொரு சூழல் வரும்போது, கட்சிப் பதவியும் கூட தன்னை நோக்கி வரும்' என எதிர்பார்க்கிறார் எடப்பாடியார். இதற்காக, அவசரப்பட்டு செயல்பட வேண்டிய அவசியம் இல்லை' என்பதுதான் அவருடைய நிலைப்பாடு. முதல்வர் பதவி வந்ததைப் போல, கட்சிப் பதவியும் எளிதாகவே தன்னை நோக்கி வரும்' எனக் காத்திருக்கிறார். அதனால்தான், தினகரனுக்கு எதிரான நடவடிக்கைகளை வேகப்படுத்தாமல் மௌனம் காக்கிறார் என்றார் விரிவாக.