ஓட்டல் ஓனரை அடிக்கறது.. செல்போன் கடைக்காரர தாக்கறது.. பெண்ணை உதைப்பது- இதுதான் திமுக-எடப்பாடி தாக்கு
காஞ்சிபுரம்: ஓட்டல் ஓனரை அடிப்பது, செல்போன் கடைக்காரர தாக்குவது, பெண்ணை உதைப்பது- இதுதான் திமுகவின் வேலை என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடுமையாக தாக்கி பேசினார்.
கருணாநிதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது வளசரவாக்கத்தில் பிரியாணி கடையில் பிரியாணி தீர்ந்து விட்டது என்று கூறியதற்காக அந்த கடையில் திமுக நிர்வாகி யுவராஜ் தாக்குதல் நடத்தினார்.
இதையடுத்து அவர் கழகத்திலிருந்து நீக்கப்பட்டார். பின்னர் பெரம்பலூரில் அழகு நிலையத்தில் திமுக நிர்வாகி செல்வகுமார் அங்குள்ள பெண்ணை கடுமையாக தாக்கினார். இதையடுத்து அவரும் நீக்கப்பட்டார்.
ஊழல் செய்தவர்கள்
தொடர்ந்து திமுக நிர்வாகிகளின் அத்துமீறல்கள் அதிகரித்து வருகிறது. இதுகுறித்து காஞ்சிபுரத்தில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக் கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி கலந்து கொண்டு பேசுகையில் , கண்ணுக்கு தெரியாத காற்றில் கூட ஊழல் செய்தவர்கள்தான் திமுகவினர்.
பிரதமராக முடியும்
அதிமுக அன்று முதல் நான் முதல்வராகி இருக்கும் இன்று வரை யாருக்கும் அஞ்சியது கிடையாது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக அதிக தொகுதிகளை வெல்லும். அப்படி வென்றால் நாம் நினைக்கின்றவர்தான் பிரதமராக முடியும்.
இதுதான்திமுகவின் வேலை
ஹோட்டல்ல சாப்டதுக்கு காசு கேட்டா ஒனரையே போட்டு அடிக்கிறது. செல்போன் கடைகாரர அடிக்கிறது. அழகு நிலையத்தில் பெண்ணை காலால் உதைப்பது ஆகியவைதான் திமுகவின் வேலை.
ஆளும் கட்சியானால் எப்படியோ
எதிர்க்கட்சியாக இருக்கும்போதே இந்தநிலையில் இருந்தால் ஆளுங்கட்சியானால் என்னென்ன செய்வார்கள் ? திமுக ஆட்சியில் என்ன நடைமுறைகளை பின்பற்றி டெண்டர்கள் விடப்பட்டது?
அதே நடைமுறைகளை பயன்படுத்தியே இப்போதும் ஒப்பந்தங்கள் விடப்படுகின்றன.
சீண்டி பார்க்காதீர்
நான் உழைத்து முன்னுக்கு வந்தவன். திமுக எங்களை சீண்டி பார்த்துவிட்டது ; அதன் பலனை அவர்கள் அனுபவித்தே ஆக வேண்டும் என்றார் அவர்.