ஓபிஎஸ்சை குஷியாக்கி.. தினகரனை தெறிக்கவிட்டு.. எடப்பாடியின் சாணக்கியத்தனம்!
தினகரனை வீழ்த்துவதற்கு ஓபிஎஸ் அணியினருடன் கைகோக்க வேண்டும் என்று முதல்வர் சாணக்கியத்தனத்துடன் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
சென்னை: டிடிவி தினகரனின் குடைச்சலை சமாளிப்பதற்காக ஓபிஎஸ் அணியினருடன் இணைய வேண்டும் என்ற எண்ணத்தில் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்ட அறிவிப்பு அவரது அரசியல் சாணக்கியத்தனத்தையே காட்டுகிறது.
அதிமுகவின் இருஅணிகளும் இணைய வேண்டும் என்றால் இரு கோரிக்கைகளை ஓபிஎஸ் அணியினர் முன்வைத்தனர். அதில் ஒன்று சசிகலா, அவரது குடும்பத்தினரை கட்சியிலிருந்து ஒதுக்க வேண்டும். மற்றொன்று ஜெயலலிதாவின் மரணத்துக்கு நீதி விசாரணைக்கு உத்தரவிடுவது ஆகும்.
இந்த 2 கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட மாட்டாது என்று ஈபிஎஸ் அணியின் நிர்வாகிகள் தெரிவித்து வந்தனர். இதில் தினகரன் ஆதரவாளர்களும் கலந்திருந்ததால் இந்த கோரிக்கைக்கு மறுப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில் கடந்த சில நாள்களாக தினகரனுக்கும் எடப்பாடி அணியினருக்கும் இடையே கடும் மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது.
நேரடியாக தாக்குதல்
கடந்த சில நாள்களாக தினகரனுக்கு எதிரான கருத்துகளை அமைச்சர் ஜெயக்குமார் வழங்கி வந்தார். இந்நிலையில் தினகரனை துணை பொதுச் செயலாளராக நியமனம் செய்தது செல்லாது என்ற தீர்மானத்தை ஈபிஎஸ் அணியினர் கொண்டு வந்த போதிலிருந்தே போர் முற்றியது.
பெரும்பான்மை
தினகரனுக்கு 30-க்கும் மேற்பட்ட எம்எல்ஏ-க்கள் ஆதரவு உள்ளது. ஈபிஎஸ் அணிக்கு 115 எம்எல்ஏ-க்கள் உள்ளனர் என்றும் இன்னும் 2 இருந்தால் பெரும்பான்மை பலத்தோடு இருப்போம் என்றும், அவர்கள் கண்டிப்பாக வருவார்கள் என்றும் சுதந்திர தினத்தன்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்திருந்தார்.
ஆட்சி கவிழாது
என்னதான் என்னால் ஜெயலலிதாவின் அரசு கவிழாது என்று கூறிவந்தாலும், அன்றாடம் ஈபிஎஸ் அணியினர் மீது விமர்சனங்களை வைத்து வருவது, தங்களால் தான் பதவி கிடைத்தது என்று கூறுவது ஆகியவற்றால் ஈபிஎஸ் அணியினர் தினகரன் மீது அதிருப்தியில் உள்ளனர். ஓபிஎஸ் அணியுடன் நெருங்கினால் ஆட்சியை தக்க வைக்கலாம் என எடப்பாடி தரப்பு கருத ஆரம்பித்துவிட்டது. ஆட்சி கவிழும் சூழல் வந்தாலும் அதை செய்தால் நஷ்டம்தான் என்பதால் தினகரன் தரப்பு எம்எல்ஏக்களும் தங்கள் பக்கம் வருவார்கள் என்பது ஆளும் தரப்பின் ஐடியா.
சாணக்கியத்தனம்
எனவே, தினகரனை சமாளிக்க முதல்வர் எடப்பாடி தனது சமயோஜித புத்தியை பயன்படுத்தியுள்ளார். அதன்படி ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். 7 மாதங்களாக விசாரணை கமிஷன் வைக்காமல் தற்போது திடீரென அமைப்பதை பார்க்கும் போது ஓபிஎஸ் அணியை குஷிப்படுத்திவிட்டு, தினகரனை வீழ்த்த முதல்வர் சாணக்கியதனத்தை கடைபிடித்துள்ளார் என்றே கருதப்படுகிறது.