வருமானவரித்துறை அதிரடி... அமைச்சர் பதவியில் இருந்து விஜயபாஸ்கர் எந்த நேரத்திலும் டிஸ்மிஸ்?
வருமானவரித்துறையின் அதிரடி நடவடிக்கையைத் தொடர்ந்து விஜயபாஸ்கர் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்படலாம் என கூறப்படுகிறது.
சென்னை: சொத்துகளை வருமான வரித்துறை அதிரடியாக முடக்கிய நிலையில் அமைச்சர் பதவியில் இருந்து விஜயபாஸ்கர் எந்த நேரத்திலும் டிஸ்மிஸ் செய்யப்படலாம் என்கின்றன கோட்டை தகவல்கள்.
டிடிவி தினகரனின் வலது கரமாக செயல்பட்டவர் விஜயபாஸ்கர் என்பது ஆர்கே நகர் இடைத் தேர்தலில் அம்பலமானது. வருமானவரித்துறையின் பிடியில் சிக்கிய விஜயபாஸ்கர் அதைப்பற்றியெல்லாம் அலட்டிக் கொள்ளாமல் எடப்பாடி கோஷ்டிக்கு தாவ தப்ப முயற்சித்தார்.
அதிரடி நடவடிக்கை
வருமானவரித்துறையின் விசாரணைக்குள்ளாக்கப்பட்ட நிலையிலும் டெல்லியில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் ஆகியோரை சந்தித்து பேசும் குழுவில் விஜயபாஸ்கரும் இடம் பெற்றிருந்தார். இந்த நிலையில் இன்று அவரது சொத்துகளை அதிரடியாக வருமான வரித்துறை முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளது.
அமைச்சரவையில் ஓபிஎஸ் அணி
அதுவும் அதிமுகவின் இரு கோஷ்டிகளும் இணையக் கூடிய நிலையில் விஜயபாஸ்கர் மீது நடவடிக்கை பாய்ந்துள்ளது பல்வேறு யூகங்களை கிளப்பிவிட்டுள்ளது. ஓபிஎஸ் கோஷ்டி இணையும் நிலையில் அந்த அணிக்கு இரு அமைச்சர்கள் பதவி தர எடப்பாடி கோஷ்டி முடிவு செய்துள்ளது.
துணை முதல்வராகும் ஓபிஎஸ்
ஓபிஎஸ்-க்கு துணை முதல்வர் பதவியும் மாஃபா பாண்டியராஜனுக்கு அமைச்சர் பதவியும் கிடைக்கும் என கூறப்படுகிறது. இதனால் அமைச்சரவையில் எடப்பாடி பழனிச்சாமி மாற்றங்களை மேற்கொள்ள கூடும் என்றே கூறப்பட்டு வருகிறது.
அமைச்சரவையில் இருந்து டிஸ்மிஸ்?
தற்போது விஜயபாஸ்கர் மீதான நடவடிக்கை தீவிரமடைந்துள்ளதால் அவர் அமைச்சரவையில் இருந்து கழற்றிவிடப்படலாம் என்கின்ற கோட்டைவட்டாரங்கள். அத்துடன் சசிகலா குடும்பத்துக்கு மிகவும் நெருக்கமானவர் என்பதாலேயே இந்த நடவடிக்கை பாய்ந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.