அரக்கோணம் அருகே தங்கக் கம்மலுக்காக 8 வயது சிறுமி கடத்திக் கொலை
வேலூர்: அரக்கோணம் அருகே தங்கக் கம்மலுக்காக 8 வயது சிறுமி படுகொலை செய்யப் பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் அருகே உள்ள வாலாஜா, வன்னியர்மேடு கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் என்பவரது 8 வயது மகள் வினிதா. இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தார்.
ஆண்டுத் தேர்வுகள் முடிந்த நிலையில், கோடை விடுமுறைக்காக அரக்கோணம் அருகே உள்ள தனது தாத்தா ரங்கநாதன் வீட்டிற்கு சென்றிருந்தார் வினிதா.
இந்நிலையில், நேற்று மதியம் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த வினிதாவைக் காணவில்லை என அரக்கோணம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப் பட்டது.
அதனைத் தொடர்ந்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், சிறுமி மாயமான இடத்திலிருந்து சுமார் 10 கி. மீட்டர் தாண்டி திருத்தணி அருகே கார்த்திகேயபுரம் விவசாய கிணற்றில் சிறுமி பிணமாக கிடப்பது கண்டறியப்பட்டது.
உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் சிறுமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சிறுமி வினிதா காதில் தங்க கம்மல் போட்டு இருந்ததாகக் கூறப்படுகிறது. அந்த நகைக்காக ஆசைப்பட்ட மர்ம ஆசாமிகள், வினிதாவைக் கடத்திக் கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications