தேர்தல் கூட்டணி பற்றி அறிவிப்பு எப்போது? பத்திரிகையாளரை சீண்டியபடி பதில் சொன்ன விஜயகாந்த்
சென்னை: அடுத்த மாதம் நடைபெறும் தேமுதிக மாநாட்டில் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும் என்றும் பத்திரிகையாளர்களிடம் அதுபற்றி தெரிவிக்க மாட்டேன் என்று அக்கட்சி தலைவர் விஜயகாந்த் தெரிவித்தார்.
பெரம்பலூரில் தேமுதிக செயற்குழு, பொதுக் குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. அதில் உரையாற்றிய விஜயகாந்த், தேர்தல் கூட்டணி தொடர்பாக இப்போதைக்கு எதையும் சொல்ல முடியாது.
தக்க நேரத்தில் சொல்வேன். அடுத்தமாதம் தேமுதிக மாநாடு நடைபெறும். அந்த மாநாட்டில் தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும் என்று பேசினார். தேர்தல் கூட்டணி குறித்து பத்திரிகையாளர்களிடம் சொல்ல மாட்டேன், மக்களிடம்தான் சொல்வேன் என்றும் விஜயகாந்த் பேசினார்.
பிரேம லதா பேசுகையில், திமுக, அதிமுக இரண்டு கட்சிகளும் ஊழலில் திளைத்துவிட்டது. இந்த இரண்டு கட்சிகளையும் அகற்ற வேண்டுமானால் கேப்டன் உரிய நேரத்தில் முடிவு எடுப்பார். இதனால் நீங்கள் எப்போதும் உழைக்க தயாராக இருக்க வேண்டும். உங்களின் உழைப்பால்தான் கேப்டன் அரியணை ஏறப்போகிறார் என்றார்.
பத்திரிகையாளர்களிடம் சொல்ல மாட்டேன் என்று சம்மந்தம் இல்லாமல் பேசி மீண்டும் நிருபர்களை சீண்டினார் விஜயகாந்த். கூட்டத்தில் பங்கேற்ற ஒரு நிருபர் சிரித்தபடி இப்படி சொன்னார், "பத்திரிகையாளர்களுக்கு அளிக்கும் பேட்டி சுவிஸ் பேங்க் கணக்கிற்கா போகப்போகிறது.. மக்களிடம்தானே அந்த தகவல் போகும். இவர் சம்மந்தம் இல்லாமல் பேசுகிறாரே" என்று.