தேர்தல் முறைகேட்டை தடுக்க தமிழகம் முழுவதும் 702 பறக்கும்படை: தலைமை தேர்தல் அதிகாரி
சென்னை: தமிழகம் முழுவதும் 702 பறக்கும்படை, 702 சோதனைச்சாவடிகள் அமைக்கப்படும். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட அன்றிலிருந்து அவை செயல்பாட்டுக்கு வரும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.
இதுதொடர்பாக லக்கானி, நிருபர்களிடம் கூறியதாவது: சென்னையில் மட்டும் இல்லாமல் தமிழகம் முழுவதும் விழிப்புணர்வு பிரசாரங்கள் நடக்க ஊக்குவிக்கப்பட்டு உள்ளது.
தமிழகம் முழுவதும் நடக்கும் தேர்தல் விழிப்புணர்வு பிரசாரத்தில் பங்கேற்க நடிகர்-நடிகைகளுக்கும் அழைப்பு விடுத்திருக்கிறோம். இதுதொடர்பாக நடிகர் சங்கத்திடம் பேசியிருக்கிறோம். சென்னை உள்பட எல்லா தேர்தலுக்கான எல்லா முன்னேற்பாடான விஷயங்களிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறோம். ‘1950' எனும் 24 மணி நேர இலவச எண் குறித்தும் தீவிரமாக மக்களின் கவனத்துக்கு கொண்டு செல்கிறோம். இந்த எண்ணை தொடர்பு கொண்டு தேர்தல் குறித்த சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொள்ளலாம்.
வாக்காளர் பட்டியலில் 6.84 லட்சம் தேவையில்லா பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இனி எந்த சிறப்பு முகாம்களும் நடக்காது. வாக்காளர் பட்டியலில் தங்களது பெயரை ‘ஆன்-லைன்' மூலம் வாக்காளர்கள் சேர்த்து கொள்ளலாம்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் தேதி டெல்லியில் இந்திய தேர்தல் ஆணையம் மூலம் அறிவிக்கப்படும். தேர்தல் தேதி எப்போது அறிவிக்கப்பட்டாலும் தமிழகத்தில் தேர்தல் பணிகளை செயல்படுத்துவதில் தேர்தல் ஆணையம் தயாராக இருக்கிறது. மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வந்து, தயார் நிலையில் உள்ளன.
இந்தத் தேர்தலில் பணப்பட்டுவாடா உள்பட பல்வேறு விதி மீறல்களைத் தடுப்பதற்காக ஒவ்வொரு தொகுதியிலும் தலா 3 பறக்கும் படைகளையும், 3 சோதனைச்சாவடிகளையும் அமைக்க உள்ளோம். அதன்படி தமிழகம் முழுவதும் 702 பறக்கும்படை, 702 சோதனைச்சாவடிகள் அமைக்கப்படும். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட அன்றிலிருந்து அவை செயல்பாட்டுக்கு வரும்.
தேர்தல் கமிஷனிடம் இதுவரை ஒரு கோடியே 34 லட்சம் வாக்காளர்கள் தங்கள் செல்போன் எண்ணை பதிவு செய்துள்ளனர். அவர்களுக்கு தேர்தல் தேதி உள்ளிட்ட தகவல்கள், இறுதி வாக்காளர் பட்டியல், அவர்கள் சார்ந்துள்ள கட்சிப்பெயர் போன்ற விவரங்களை எஸ்.எம்.எஸ். ஆக அனுப்புவோம். தேர்தல் கமிஷனிடம் தங்கள் செல்போன் எண்களை ஆன்-லைன் மூலமாகவும் பதிவு செய்து கொள்ளலாம்.
சட்டமன்ற தேர்தலில் வாக் காளர்கள் தங்கள் உரிமைகள் மற்றும் கடமைகளை உணர்ந்து ஓட்டுப்போட வேண்டும். ஜனநாயக உரிமையை நிலை நாட்ட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.