டெல்லி சிறப்பு அதிகாரி விக்ரம் பத்ரா... வந்தார், பார்த்தார், செல்கிறார்... என்னாகும் தேர்தல்?
ஆர்கே நகர் இடைத்தேர்தலுக்கான சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்ட விக்ரம் பத்ரா அரசியல் கட்சியினர், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய நிலையில் டெல்லி புறப்பட்டு செல்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை : சென்னை ராதாகிருஷ்ணன் நகர் இடைத்தேர்தலுக்கான சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள இந்திய தேர்தல் ஆணைய இயக்குனர் விக்ரம் பத்ரா சென்னையில் 2 நாட்கள் ஆலோசனை முடித்த நிலையில் அவசரமாக டெல்லி புறப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை ஆர்கே நகர் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை மறுதினம் நடைபெறும் நிலையில் வேட்பாளர்களின் இறுதிக்கட்ட பிரச்சாரத்தால் ஆர்கே நகரில் திரும்பிய திசையெல்லாம் கட்சிகொடிகள் பறக்கின்றன. இந்நிலையில் பணப்பட்டுவாடா தொடர்பாக அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் அனைத்து கட்சிகள் சார்பிலும் முன் வைக்கப்படுகின்றன.
இந்நிலையில் ராதாகிருஷ்ணன் நகர் இடைத்தேர்தலுக்கான சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்ட இந்திய தேர்தல் ஆணைய இயக்குனர் விக்ரம் பத்ரா கடந்த 2 நாட்களுக்கு முன்னர் சென்னை வந்தார். தேர்தல் ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய அவர், அரசியல் கட்சிகளுடனும் தனித்தனியே ஆலோசனையில் ஈடுபட்டார்.
இதனிடையே வாக்குப்பதிவிற்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் சிறப்பு அதிகாரி விக்ரம் பத்ரா அவசரமாக டெல்லி செல்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆர்கே நகர் நிலவரம் குறித்து அவர் தலைமை தேர்தல் ஆணையத்திடம் அறிக்கை அளிப்பார் என்று தெரிகிறது. இதனால் இடைத்தேர்தலுக்கு தடை ஏற்படுமோ என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏப்ரல் மாதம் நடைபெறவிருந்த இடைத்தேர்தலும் 2 நாட்களுக்கு முன்னர் பணப்பட்டுவாடா புகார் காரணமாக நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.