இரட்டை இலை சின்னம் யாருக்கு ? நவம்பர் 8ஆம் தேதிக்கு தேர்தல் ஆணையம் ஒத்திவைப்பு
இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு விசாரணை நவம்பர் 8க்கு ஒத்திவைக்கப்பட்டது.
டெல்லி: இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு விசாரணையை நவம்பர் 8ஆம் தேதிக்கு தேர்தல் ஆணையம் ஒத்திவைத்துள்ளது. டி.டி.வி தினகரன் தரப்பு வாதம் முடிந்துள்ளது. இனி ஓபிஎஸ், ஈபிஎஸ் தரப்பு வாதம் முடிந்த பின்னரே சின்னம் யாருக்கு என்று தேர்தல் ஆணையம் தீர்ப்பு அளிக்கும்.
பிளவுபட்ட ஓபிஎஸ் அணியும் சசிகலா அணியும் இரட்டை இலைக்கு உரிமை கோரியதால் ஆர்.கே. தேர்தலில் போது அதிமுகவும், இரட்டை இலை சின்னமும் தேர்தல் ஆணையத்தால் முடக்கப்பட்டன.

சசிகலா சிறைக்கு சென்ற பிறகு அந்த அணி முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் கட்டுப்பாட்டில் வந்தது. பின்னர் அந்த அணியும், ஒபிஎஸ் அணியும் ஒன்றாக இணைந்தன.
சசிகலா அணியின் ஒரு பிரிவினர் துணை பொதுச்செயலாளர் தினகரன் தலைமையில் செயல்பட்டு வருகிறார்கள். இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கே ஒதுக்கவேண்டும் இருவருமே முறையிட்டு வருகின்றனர்.
டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் கமிஷன் அலுவலகத்தில் தலைமை தேர்தல் ஆணையர் ஏ.கே.ஜோதி முன்னிலையில் நடந்து வரும் இந்த வழக்கு விசாரணை 5 கட்டங்களை நிறைவு செய்துள்ளது.
கடந்த அக்டோபர் மாதம் 6ஆம் தேதியில் இருந்து நவம்பர் 1ஆம் தேதிவரை இரட்டை இலை வழக்கு விசாரணைக்கு வந்துள்ளது.
டிடிவி தினகரன் தரப்பும், ஓபிஎஸ், ஈபிஎஸ் தரப்பும் கார சார விவாதங்களை முன்வைத்துள்ளன. கடந்த 1ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின் போது ஓபிஎஸ் தரப்பு போலியான பிராமண பத்திரங்கள் தாக்கல் செய்துள்ளதாக முன்வைத்தார் தினகரன் தரப்பு வழக்கறிஞர். அதை ஈபிஎஸ், ஓபிஎஸ் தரப்பினர் முன்வைத்துள்ளனர். சசிகலா அணியினர் வேண்டுமென்றே விசாரணையை இழுத்தடிப்பதாக ஒருங்கிணைந்த அணியினர் குற்றம்சாட்டினர்.
இந்த வழக்கில் 6ஆம் கட்ட விசாரணை தேர்தல் ஆணையத்தில் இன்று நடைபெற்றது. டிடிவி தினகரன் தரப்பு வழக்கறிஞர் தனது வாதத்தை நிறைவு செய்தார். இதனையடுத்து வழக்கு விசாரணையை தேர்தல் ஆணையம் நவம்பர் 8ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
இரட்டை இலை சின்ன வழக்கு விவகாரத்தில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அளித்த கெடு முடிந்து விட்டது. அதே நேரத்தில் உச்சநீதிமன்றம் நவம்பர் 10 வரை தேர்தல் ஆணையத்திற்கு கெடு அளித்துள்ளது. அதற்குள் தேர்தல் ஆணையம் சின்னம் யாருக்கு என்று விசாரித்து தீர்ப்பை அறிவிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications